நடிகை சரண்யா மோகன் தன் கல்யாணத்தில் நடந்த கலாட்டா நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரண்யா மோகன், 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ஒருநாள் ஒரு கனவு படத்தில் சிறிய வேடத்தில் நடித்த நிலையில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். துருதுரு குணங்களைக் கொண்ட கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி போனதால் சரண்யா மோகன் அந்த ஒரு படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 


இதன் பின்னர் ஜெயம் கொண்டான், அஆஇஈ, பஞ்சாமிர்தம், மகேஷ் சரண்யா மற்றும் பலர், வெண்ணிலா கபடி குழு, ஈரம், ஆறுமுகம், அழகர்சாமியின் குதிரை, ஒஸ்தி ஆகிய பல படங்கள் தமிழ் நடித்திருந்தார். மேலும் வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இப்படியான நிலையில் 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 


சில ஆண்டுகள் கழித்து நடிகை சரண்யா மோகன் அதீத உடல் எடையுடன் கூடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அவர் உருவகேலி செய்யப்பட்டார். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். சரண்யா மோகனுக்கு அனந்தபத்மநாபன் அரவிந்த் என்ற மகனும், அன்னபூர்ணா அரவிந்த் என்ற மகளும் உள்ளனர்.


இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரண்யா மோகன், திருமணத்தில் நடந்த கலாட்டாக்கள் குறித்து தெரிவித்தார். அதில், “எங்களோட நிச்சயதார்த்தம் முடிஞ்சி நாங்க ஒரு செல்ஃபி போட்டோம். அதைப் பார்த்து தான் எனக்கு நிச்சயம் ஆச்சுன்னு தெரிய வந்துச்சு. நிறைய பேரு நினைக்கிற மாதிரி எங்களுக்கு லவ் மேரேஜ் ஆச்சுன்னு சொல்றது உண்மை இல்லை . நாங்க 7 வருஷமா நண்பர்களா இருந்தோம். ஆனால் அந்த 7 வருஷம், ப்ரண்ட்ஸ் என அந்த 2 வார்த்தையை மட்டும் வச்சி காதல் கல்யாணம் என பரப்பி விட்டுட்டாங்க. 


என் கணவர் கல்யாணத்துக்கு 300 பேரை அழைக்க வேண்டும் என முடிவு பண்ணியிருந்தார். ஆனால் அது 3 ஆயிரம் பேராக மாறியது. அதற்கு காரணம் நடிகர் விஜய் அண்ணாவை நாங்கள் கல்யாணத்துக்கு அழைத்திருந்தோம். அந்த நேரம் கொச்சின் ஏரியாவில் ஷூட்டிங்கில் இருந்தார். ஆனால் யாரோ விஜய் வரப்போகிறார் என சொல்ல, எதிர்பார்த்ததை விட அதிக பேர் வந்திருந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், யாரென்றே தெரியாதவர்கள் எல்லாம் மேடை ஏறி கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள். நான் அரவிந்துக்கு தெரிந்தவர்கள் என்றும், அவர் எனக்கு தெரிந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டனர்” என தெரிவித்துள்ளார்.