மதிப்பிற்குரிய அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்காக நான் ஆதரவாக இருப்பேன் என நடிகை ராதிகா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா உள்ளார். இந்த நிலையில், ரோஜா குறித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. கட்சி ரீதியாக விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து முன்னாள் அமைச்சர் பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடியவர் என்றும், அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் பேசியுள்ளார். 


முன்னாள் அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளித்த ரோஜா, ‘ஒரு முன்னாள் அமைச்சர், என்னைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசியிருக்கிறார். அவர் வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கின்றனர் என்பதை அவரும் நினைவில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தால் இப்படியெல்லாம் பேசுவீர்களா?’ என கேள்வி எழுப்பி கண்ணீர் விட்டார். 


இந்த நிலையில் ரோஜா மீதான விமர்சனத்துக்கு நடிகை ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ”ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர். இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது” என்றார். 






ஒரு அமைச்சரை புளூ பிலிமில் நடித்ததவர் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக பதிலடி கொடுத்துள்ள ராதிகா, ஒரு மனிதராக, ஒரு குடும்பத்தின் தலைவனாக, ஒரு அரசியல்வாதியாக தனது தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் குரலெழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.