தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகைகளாக 80களின் காலகட்டத்தை அலங்கரித்த சகோதரிகள் தான் அம்பிகா மற்றும் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராதா, அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களில் கொடிகட்டி பறந்தார். மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 



ராதாவின் ரீ என்ட்ரி :


ஒரு நீண்ட பிரேக்குக்கு பிறகு சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை ராதா. பல நிகழ்ச்சிகளில் நடுவராக மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அவரின் மகள்கள் இருவருமே அம்மாவின் வழியே சினிமாவில் என்ட்ரி கொடுத்தனர். அந்த வகையில் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் ஜோடியாக அறிமுகமானார். அதற்கு பிறகு பெரிய அளவில் துளசிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். 


கார்த்திகாவின் அறிமுகம் :


ராதாவின் மூத்த மகள் கார்த்திகா, 2009ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக அறிமுகமானார். அதற்கு பிறகு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான 'கோ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இருப்பினும் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் தனது தந்தையின் பிசினஸை நிர்வகித்து வந்தார். 


கார்த்திகாவின் நிச்சயதார்த்தம் :


கடந்த மாதம் கார்த்திகாவுக்கு ரோஹித் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. தனது நிச்சயதார்த்த மோதிரத்தை ஹைலைட் செய்து காண்பிப்பது போல இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். கார்த்திகாவின் அந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வந்த நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். 


 



லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் :


அதை தொடர்ந்து தற்போது கார்த்திகா மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து "உன்னை சந்திப்பது தான் என் வாழ்க்கையின் எல்லை.  உன்னோடு காதலில் விழுந்தது ஒரு மேஜிக். நாம் ஒன்று சேரும் கவுண்ட்டவுன் துவங்கியது" என்ற குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.   


எப்போ திருமணம் ?


கார்த்திகா - ரோஹித் திருமணம் திருவனந்தபுரத்தில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்த திருமண நிகழ்ச்சி நடிகை ராதாவுக்கு சொந்தமான ஹோட்டலில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.