‘முதல்வன்’ படத்தில் ஒரு நாள் முதல்வராக இருப்பது போல் ஒரு நாள் பிரதமராக வேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.


ராஷி கண்ணா


இந்தியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கஃபே’ படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் ராஷி கண்ணா (Raashi Khanna). பின் தெலுங்கில் வெளியான பல்வேறு வெற்றிப் படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணிக்கு வந்தார்.


தமிழில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து அடங்க மறு, சங்கத்தமிழன், அயோக்யா, துக்லக் தர்பார் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்த ராஷி கண்ணா கடந்த ஆண்டு விஜய் சேதுபதி , ஷாஹித் கபூருடன் இணைந்து ஃபார்ஸி என்கிற ஓடிடி சீரிஸில் நடித்தார். தற்போதைய நிலைப்படி ஓடிடியில் நடிப்பதற்கு அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷி கண்ணா, சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் அரண்மனை 4 ஆம் பாகத்தில் நடித்துள்ளார்.


பிரதமர் ஆக ஆசை


 நடிப்பு  ஒருபக்கம், சமூக சேவை ஒரு பக்கம் என பிஸியாக இருந்து வரும் ராஷி கண்ணா, கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியாக இருந்தாலும், தனது விருப்பங்களாக இருந்தாலும் அதை வெளிப்படையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ள கூடியவர்.  தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் உடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்றும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட கடவுள் நம்பிக்கை உள்ள நபரைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஒருமுறை தெரிவித்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலனாது.


தற்போது இதே போல் தனது ஆசையை நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார் ராஷி கண்ணா. நல்ல அரசியல் ஆளுமையின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முன்பொரு முறை தெரிவித்திருந்தார் ராஷி கண்ணா. இது குறித்து விளக்கமளித்த அவர் “ பாலின பேதம் இல்லாமல் மக்களை ஈர்க்க கூடிய தனது அதிகாரத்தை செயல்களுக்காக பயன்படுத்திய எந்த அரசியல் தலைவரின் கதையிலும் நான் நடிப்பேன்.


இன்றைய சூழலில் இளைஞர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புவது இல்லை. ஒரு அரசியல் ஆளுமையின் வாழ்க்கையையும் அவருடைய செயல்களையும் பார்த்து இளைஞர்கள் அரசியல் மீது ஆர்வம் காட்டுவார்கள் என்றால் அப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. குறிப்பாக பிரமராக இருப்பது பற்றி நான் யோசித்திருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு நாளாவது பிரதமராக இருக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது “ என்று ராஷி கண்ணா தனியார் ஊடகத்தின் நேர்க்காணலில் பேசியுள்ளார். 


அரண்மனை 4


சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கெனவே மூன்று பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப் பட்ட அரண்மனை படத்தின் 4 ஆவது பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. தமன்னா , ராஷி கன்னா , சந்தோஷ் பிரதாப்,  ராமச்சந்திர ராஜு , கோவை சரளா, யோகி பாபு,  VTV கணேஷ்,  டெல்லி கணேஷ் , ராஜேந்திரன் , சிங்கம்புலி , தேவா நந்தா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.