ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தகவலைச் சரிபார்க்க வேண்டும் என நடிகை நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதேசமயம் பேட்மிண்டன், கார் பந்தயம் உள்ளிட்ட துறைகளில் தனது திறமைகளையும் நிவேதா பெத்துராஜ் வெளிப்படுத்தி வருகிறார். இப்படியான நிலையில் கடந்த சில தினங்களாக அவர் குறித்து சில தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. 


இது அவருடைய ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக நிவேதா பெத்துராஜ் பதிலளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அவர் எக்ஸ் வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 மன அழுத்தத்தில் குடும்பம்


அதில், “சமீபகாலமாக எனக்கு பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிப் பேசுபவர்கள் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மனமில்லாமல் கெடுக்கும் முன், சம்பந்தப்பட்டவர்கள் தங்களின்  தகவலைச் சரிபார்க்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கும் என்று நினைத்ததால் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இத்தகைய தவறான தகவல்களால் நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள்.


நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாகவும், சுதந்திரமாகவும் தனித்து செயல்பட்டு வருகிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் தான் இருக்கிறோம். திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரையோ, ஹீரோவிடம் நடிக்கவோ, பட வாய்ப்புகளை தரும்படியோ கேட்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அதுதான் நான் யார் என்று அறிமுகம் செய்தது. 


நான் எப்போதும் வேலை அல்லது பணத்திற்காக பேராசை கொள்ள மாட்டேன். என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002 ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 


பல போராட்டங்களை சந்தித்துள்ளேன் 


அதேசமயம் 2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் எனது விருப்பமாக இருந்து வருகிறது. உண்மையில் சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயங்கள் பற்றி எனக்கு தெரியாது . நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன்.  உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே நான் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். 


என்னைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பும் இந்த சம்பவத்தை நான் இதை சட்டரீதியாக அணுகப் போவதில்லை. ஏனென்றால் ஊடகத்துறையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது, அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்த்து, எங்கள் குடும்பத்தை இனிமேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.