90-களில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக உலா வந்தவர் நடிகை மோகினி. இவர் சமீபத்தில் யூ டியூப்பில் பிரபல நடிகர் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.

Continues below advertisement

அதில் அவர் கூறியிருப்பதாவது, 

ஈரமான ரோஜா மோகினி:

இப்போதும் ஈரமான ரோஜா மோகினியா? என்று கேட்டிருக்கிறார்கள். எனக்கு பரதநாட்டியம் மாதிரி இருந்தது. பரதநாட்டியத்தில் தனி நடிப்பு அதிகம் பண்ணுவோம். கிருஷ்ணர் இருக்கமாட்டார், ராமர் இருக்கமாட்டார், ஆனால் அவர்கள் இருப்பது போல நினைத்து ஆடுவோம்.

Continues below advertisement

நடிகையாக தொடரலாம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இப்போது வரை இல்லை.  என்னைக்கூட இப்படி காட்டியிருக்கிறார்களே? அந்த படத்தில் என் எடை 43 கிலோ. 18, 19 வயது பெண் போல என்னைக் காட்டியிருப்பார்கள். அதன்பிறகுதான் நமக்கும் ஏதோ நடிக்க வருகிறது. நடிக்கலாம் போல இருக்கிறது என்று தோன்றியது.

பாலய்யா அறிவுரை:

கடின உழைப்பு எல்லாம் அவர்கள்தான் செய்தார்கள். அவர்கள் கடின உழைப்புக்கு எங்களுக்கு பலன் கிடைத்ததாக கருதினேன். அப்பாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. பாலைய்யாவுடன் நடிக்கும்போது உன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் எந்த பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கலாம். கேமரா முன்பு நீ சிறப்பாக இருக்க வேண்டும். பைசா கொடுத்து உன்னைப் பார்க்க வருபவரை நீ மதிக்க வேண்டும். இது அவருக்கு பெரிய தத்துவம். அவர் என்னுடன் நடிக்கும்போது மிகவும் தன்மையாக நடந்து கொண்டார்.

அக்ஷய்குமாருக்கு உடம்பில் எலும்பு இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியாது. அந்தளவு வளைவு தன்மை கொண்டவர். பல்டி அடிப்பார். ஏர் ஃப்ளிப் செய்வார். அவரைப் பார்க்கும்போது பயம். அவர் 10 பல்டி அடிக்கிறார். நீ போய் 2 பல்டி அடினு சொல்லிடுவாங்களோனு. அவர் ஒரு ஜென்டில்மேன். 

கிசுகிசு பயம்:

சிவாஜியுடன் நடித்தது கூட்டமான கோயிலுக்குள் நம்மை மட்டும் தனியாக கர்ப்ப கிரகத்திற்குள் அழைத்துச் சென்றது போல இருந்தது. இப்போ இருக்கிற சீரியஸ் அப்போது இருந்தது என்றால் மயக்கம். சிவாஜி 6.45 மணிக்கு இருந்தால் 6.40 மணிக்கு இருக்க வேண்டும் என்றார்கள். மிகவும் கவர்ச்சியான வேடங்களில் எனக்கு நடிக்க விருப்பமில்லை.

செட்டில் நான் மிகவும் அமைதியாக இருப்பேன். என்னைப் பற்றி கிசுகிசு வந்துவிடும் என்று எனக்கு மிகவும் பயம். திலீப் எனக்கு நெருங்கிய நண்பர் போல. 

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை மோகினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த ஈரமான ரோஜாவே, நாடோடி பாட்டுக்காரன், சின்ன மருமகள், ஜமீன் கோட்டை உள்பட பல படங்கள் மிகவும் பிரபலம் ஆகும்.

சிவாஜி கணேசன், கார்த்திக், பாலய்யா, மம்முட்டி, மோகன்லால், அக்ஷய் குமார், ஆனந்த் பாபு என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக குற்றப்பத்திரிகை என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் மிகப்பெரிய அளவில் நடிப்பதை குறைத்துவிட்டார்.