நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 2016 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சிமா அதனைத் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம்  படத்தில்  நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்.


அதில் இருந்தே இந்த ஜோடி காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியான நிலையில் இருவருமே இதனை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர். ஆனால் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டனர். ஆனால் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இருவரும் தங்கள் காதலை வெளியுலகிற்கு அறிவித்தனர்.






இதுதொடர்பாக மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக்குடன் இணைந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்து போன போது நீ ஒரு தேவதை போல என் வாழ்வில் வந்தாய். அது வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய்!!


ஒவ்வொரு முறையும் நான் குழப்பமாக உணரும் நேரங்களில் நீ என்னை கைக்கொடுத்து தூக்கிவிடுகிறாய். என் குறைகளை ஏற்றுக்கொள்ளவும், அடிக்கடி நான் நானாக இருக்கவும் நீ  எனக்குக் கற்றுக் கொடுத்தாய். நான் உன்னை காதலிக்க சிறந்த விஷயம் எதுவென்று கேட்டால் நான் யார் என தெரிந்து நீ  என்னை எவ்வளவு காதலிக்கிறாய் என்பதுதான்! நீ  எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமானவராக இருப்பாய். என தெரிவித்திருந்தார். இதனால் திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


இந்நிலையில் திடீரென நடிகை மஞ்சிமா மோகன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை  நீக்கியுள்ளார். இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘தனது புகைப்படங்களை archive  செய்துவிட்டேன் என்றும், மீண்டும் புதிய புகைப்படங்களோடு எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்குவேன்’ என தெரிவித்துள்ளார். கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.