திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெறப்பட்ட லட்சு சுவையாக இல்லை என பிரபல தெலுங்கு நடிகை மாதவிலதா தெரிவித்த குற்றச்சாட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உலகின் இரண்டாவது பணக்கார கடவுளாக அறியப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலைமோதுகின்றனர். திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டுவில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புதிதாத ஆந்திராவில் பொறுப்பேற்ற சந்திரபாபு தலைமையிலான அரசு முந்தைய அரசான ஜெகன் மோகன் ரெட்டி அரசை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பதி ஏழுமலையானை சமய பேதம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் வணங்கி வருகின்றனர். அப்படி இருக்கும்போது இப்படியான குற்றச்சாட்டு பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்தது. இப்படியான நிலையில் நடிகை மாதவி லதா சமூக வலைத்தளத்தில் திருப்பதி லட்டு தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “திருப்பதி லட்டுவின் சுவை தான் எதிர்பார்த்தது போல் இல்லை. லட்டில் உள்ள நெய்யில் மணமில்லாமல் சர்க்கரை மற்றும் பச்சை கற்பூர வாசனை அதிகமாக உள்ளது. கடந்த டிசம்பரில் தான் சாப்பிட்ட சிறிய லட்டு மிகவும் சுவையாக இருந்தது. ஆனால் இப்போது கிடைத்த லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்துள்ளது. பக்தர்கள் சிறந்த தரமான பிரசாதத்தைப் பெற வேண்டும் என்று விரும்புவதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு இந்துவாகவும், சிவனின் பக்தையாகவும், பிரசாதத்தின் தரத்தை கேள்வி கேட்க தனக்கு உரிமை உண்டு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. உடனடியான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. அவர்கள் நடிகை மாதவி லதாவை தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மீண்டும் ஒரு பதிவை மாதவி லதா வெளியிட்டுள்ளார். அதில், “திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. லட்டுகளை வாங்கியது யார்?, எங்கே, எப்போது வாங்கப்பட்டது?, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் புகாரளிக்காமல் ஏன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டீர்கள்?” என கேள்வியெழுப்பினர்.
ஆனாலும் அதிகாரிகள் தன்னிடம் பணிவுடன் தான் பேசினர். மற்றவர்கள் அனுமதியில்லாமல் என் போனில் ரெக்கார்ட் செய்ய முடியாது என்பதால் செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். சமூக ஊடகங்கள் என்பது சாதாரண மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க பயன்படுகிறது. ஒவ்வொருவரின் தொலைபேசி எண்களையும் கண்டுபிடித்து புகார் செய்வது சாத்தியமில்லை” எனவும் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு வந்த லட்டு திருமலையில் தான் பெறப்பட்டது. லட்டின் சுவை அறிந்தவர்களால் என் வலியை புரிந்துக் கொள்ள முடியும். மாதவி லதாவின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
