Vishal On Budget: மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான தனது எதிர்பார்ப்புகளை நடிகர் விஷால் வெளிப்படுத்தியுள்ளார். 


பிரதமரிடம் கோரிக்கை வைத்த விஷால்


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மீது உங்களின் எதிர்பார்ப்பு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய விஷால், “தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். காரணம் இரட்டை வரி வசூலிக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ”ஒரே நாடு ஒரே வரி” என நீங்கள் சொன்னபோது நான் உங்களை நம்பினேன், ஆனால் எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாருமே இந்த விவரகாரம் பற்றி கவலை கொள்வதில்லை. இது திரையுலகை மிகவும் மோசமாக பாதிக்கிறது.


ரத்தம் வடிக்கும் திரையுலகம் - விஷால்:


8% அதிகமாக உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. இன்று திரையுலகம் ரத்தம் சிந்திக் கொண்டுள்ளது.  இந்த வருடம் திரையுலகிற்கு மிக மோசமான வருடங்களில் ஒன்றாகும். அந்த வலியை இந்திய திரையுலகம் வெளியே காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் அதை தங்களுக்குள்ளே மறைத்துவைத்துக் கொண்டு, தங்கள் இழப்புகளைப் பற்றி பேச மாட்டார்கள். பட்ஜெட் மூலம் எல்லோரும் சாதாரண வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளியுங்கள்,  நாங்கள் ஆடம்பர வாழ்க்கையைக் கேட்கவில்லை. வசதியான காரையோ வசதியான வீட்டையோ கேட்கவில்லை. நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். நீங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த பட்ஜெட்டை வழங்குவீர்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.






மத்திய அரசு பட்ஜெட்:


பிரதமர் மோடி தலைமையிலான 3.0 அரசின் முதல் பட்ஜெட் வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அரசின் முதல் விரிவான பட்ஜெட் என்பதால் பல்வேறு வரி சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரிச்சுமையை குறைத்து, பொதுமக்களிடையே பணப்புழக்கத்தை தூண்டக்கூடிய அற்விப்புகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திரைத்துறையில் உள்ள பிரச்னைகள் பற்றி நடிகர் விஷால் பேசியுள்ளார்.