எதிர்காலத்தில் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 


நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “சமூகத்தில் எனக்கு இந்தனை ஆண்டுகளாக ஒரு தடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.


என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.


அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடம்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.


அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.


நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என கூறியுள்ளார். 


ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி ட்வீட்களை வெளியிட்டு வந்தார். இதனால் விஷால் பாஜகவில் சேரப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டை விஷால் தெளிவாக கூறியுள்ளார்.