மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில்

'' இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இயக்குநருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தயாரிப்பாளரின் விருந்தோம்பலை பற்றி அனைவரும் சொன்னார்கள் எனக்கு அவருடைய இறை நம்பிக்கை மிகவும் பிடித்திருந்தது. நான் இப்படத்தின் முழு திரைக்கதையையும் கேட்டேன். அது சிக்கலானது. அதை காட்சிப்படுத்துவது கடினமானது. தயாரிப்பாளரிடம் எப்படி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டீர்கள்? என கேட்டேன். நம்முடைய தேசத்தில் தான் 'ஏரும் தெய்வம் எருதும் தெய்வம்' என்று இருக்கிறது. இந்தக் கதையில் வட மஞ்சுவிரட்டு என்று ஒரு விசயத்தை வைத்து அதை சுற்றிலும் நல்லதொரு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.  

Continues below advertisement

விமலுடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இது. இதற்கு முன் நானும் அவரும் 'ஓம் காளி ஜெய் காளி' எனும் வெப் சீரிஸில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத பல காரணங்களால் நான் அதில் நடிக்கவில்லை. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் கேந்திரன் ஏற்படுத்தி கொடுத்தார். விமலிடம் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும் அது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்தப் படத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் விமல் அற்புதமாக நடித்திருக்கிறார். அதில் ஹீரோயிசமும் தெரியவேண்டும் அதே நேரத்தில் அதை ஒரு எல்லைக்குள் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டும். இதை மனதில் வைத்து நன்றாக நடித்திருந்தார்.   இந்த படத்தின் திரைக்கதை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு போலிருக்கும்.‌ இதற்கு கேமரா மேன், எடிட்டர், ஃபைட் மாஸ்டர், மியூசிக் டைரக்டர் இமான் ஆகியோர் உயிர் கொடுத்திருக்கிறார்கள். தீபா- சரவணன் சக்தி- பால சரவணன்- ஆகியோர் மூவரும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் நிச்சயமாக சிரிப்பார்கள்.

சமூகப் பிரச்சனைகளை சொல்லி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இந்த படம் ஒரு கிராமத்தின் கதை. அதை சுற்றியுள்ள மக்களின் மனநிலை.. அவர்களின் உறவுமுறை... இதை இந்த படம் பேசி இருக்கிறது. தயாரிப்பாளர் குறிப்பிட்டதை போல் 'ஏரும் எங்கள் கடவுள்தான் எருதும் எங்கள் கடவுள்தான்' இதையும் இந்தப் படம் பேசுகிறது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும்

நடிகர் விமல் பேசுகையில், ''  இந்தப் படத்தை பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த 'பாண்டி முனி' பாடலை தான் ஒலிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த இமானுக்கு நன்றி.

எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். ஏனெனில் என் சக்தி என்ன என்று எனக்குத் தெரியும்.  ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.ஹீரோயின் பெயர் சனாஸ்கா. இந்தப் பெயரை கூப்பிடுவதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கிறது. அவர் இந்த படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார். எனக்கு பால சரவணன் ஆகிய இருவருக்கும் மாடுடன் தான் பெரிய டாஸ்க் இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை.

படத்தில் நானும், நட்டி நடராஜும் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது.. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதே அடிக்க வேண்டும் என்றால் அடித்து விடு, மிதிக்க வேண்டும் என்றால் மிதித்து விடு என மிகவும் சுதந்திரம் கொடுத்தார். அதனால் அந்த காட்சி அற்புதமாக வந்தது. அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளை பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ரோபோ சங்கர் மாமா மறைந்த போது குற்றாலத்தில் 'வடம்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். பெரிய பொருட்செலவில் அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குநரிடம் சொன்னேன். படப்பிடிப்பிலிருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கேட்டு பார்ப்போம் என இயக்குநரிடம், இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக விமானம் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.

ஆயிரம் துணை நடிகர்கள்-  மக்கள்-  மாடு பிடி வீரர்கள்-  சிவகங்கையிலிருந்து ஏராளமான மாடுகளும் வந்து இருந்தது. கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன் இல்லை என்றார்கள். அதன் பிறகு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். மனைவியிடம்,' நீ சென்று ஆறுதல் கூறு' என்று சொல்லிவிட்டேன். அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலியுடன் பெரிய ப்ளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகளை வழங்கி, அதை பதியமிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கதையை அவர் கவனமாக தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார். இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இயக்குநர் கேந்திரன் இந்த கதையை என்னிடம் சொன்னார். கதை நன்றாக இருந்தது. ஆனால் அதை அவர் சொன்னபடியே எடுத்து விடுவாரா..! என்ற சந்தேகம் இருந்தது. இது ஒரு கமர்சியல் திரைப்படம் தான். ஆனால் இது கதை உள்ள கமர்சியல் படம். அதுவும் நான்கு ஐந்து கதைகள் இருக்கும் படம். முதலில் இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி கிளைமாக்ஸ்சில் அனைத்தையும் கச்சிதமாக முடிப்பார். படப்பிடிப்பில் நிறைய காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்பிக்கையே வரவில்லை. நேற்று முன்தினம் படம் பார்த்த பிறகு தான் எனக்கு திருப்தியானது. அவர் என்னிடம் சொன்ன கதையை கச்சிதமாக படமாக்கி இருந்தார். இந்த படத்தை இனி ரசிகர்கள் திரையரங்கத்தில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.