சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம் அடைந்ததாக நேற்று முன் தினம் (மே.03) தகவல்கள் வெளியாகின.


தங்கலான் ஷூட்டிங்கில் காயம்


விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி, அவரது நடிப்பு பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. மற்றொருபுறம் விக்ரம் அடுத்ததாக நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கும் நிலையில், கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


வீடு தேடிச் சென்ற ரசிகர்


கோலார் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், சென்னையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் படப்பிடிப்பு தளத்தில் விக்ரமின் விலா எலும்பு முறிந்ததாகவும், அதனால் சிறிது காலத்துக்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் விக்ரமின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.


இந்நிலையில் விக்ரம் விரைந்து உடல்நலம் பெற அவரது ரசிகர் ஒருவர் விக்ரமின் வீடு வரை சென்று அவரை வாழ்த்தி தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். “ஆஸ்கர் உங்களுக்காகக் காத்துள்ளது, நீங்கள் மீண்டு வருவதற்காக காத்திருக்கிறேன்” என சிவா எனும் அந்த ரசிகர் பதிவிட்டுள்ள நிலையில், தன் ரசிகரின் அன்பில் ஆடிப்போன விக்ரம் இதற்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்.


நெகிழ்ந்த விக்ரம்!


“மிக்க நன்றி சிவா. வீடு வரை வந்து உங்கள் அன்பை தெரிவித்ததற்க்கு. நீங்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது  எனக்கு வேறு என்ன வேண்டும். ஐ வில் பி பேக்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






ரசிகரின் அன்பு குறித்து நெகிழ்ச்சியுடன் விக்ரம் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு சமூக  வலைதளங்களில் கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறது.


மேலும் படிக்க: Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் !