திலகமும் இல்லாமல் வட்டமும் இல்லாமல் தாமரை இதழ் போன்ற வடிவிலான ஸ்டிக்கர் பொட்டுகள் 90-களில் மிகப் பிரபலம். சினிமா ஹீரோயின்களின் மேக்கப்களில் அது நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இது எந்த நடிகைக்குப் பொருந்திப் போகுமோ இல்லையோ விசித்ராவுக்கு என்றே தயாரித்தது போலப் பொருந்திப்போகும். விசித்ரா யார் என மறந்து போனவர்களுக்கு, முத்து திரைப்படத்தில் செந்தில் மற்றும் வடிவேலு கதாப்பாத்திரத்தின் ஜோடி. சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் பல கேரக்டர்களில் நடித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தனது க்ளாமர் கேரக்டர்களுக்காக அறியப்பட்டவர்.






அண்மையில் ஒரு யூட்யூப் சேனலின் நடிகர் ஷகிலாவுடனான மனம்திறந்த பேட்டியில் அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள். “நான் அக்மார்க் சென்னை பொண்ணு. அப்பா சினிமா தயாரிப்பாளர் நடிகர், அம்மா மேடை நாடகங்களில் நடிச்சிருக்காங்க. இதனால் எனக்குள்ளேயும் சினிமா ஒட்டிக்கிச்சு. என் கூடப் பொறந்தவங்க மூன்று பேர் நான் தான் மூத்த பிள்ளை. நான் பி.ஏ.சைக்காலஜி முடித்துவிட்டு கேரளாவில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போதுதான் அங்கே ஒரு ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக என் கணவரைச் சந்தித்தேன். அவருக்கு நான் நடிகர் என்பது தெரியாது. என் கேரக்டரைப் பார்த்து அவருக்கு பிடித்திருந்தது. இருவரும் பேசி நட்பானோம். காதல் திருமணம்தான் என்றாலும் அவரது வீட்டில் நான் கிளாமர் பாத்திரத்தில் நடிப்பது யாருக்கும் பிடிக்கவில்லை.


அவருக்காக நிறைய அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டி இருந்தது. அதனால் நடிப்பை விட்டேன். நன்கு படித்து பிடித்த வேலையைச் செய்யும் ஒரு பெண்ணுக்கு இப்படி அன்புக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவது அத்தனை எளிதான காரியமாக இல்லை. 18 வருடம் சினிமா வாசமே இல்லாமல் இருந்தேன். மைசூருவில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்து சிலர் பேட்டி எடுக்க வந்தனர். அப்படியே சினிமாவில் ரீ எண்ட்ரி வாய்ப்பும் வந்தது” என்றார். 




விசித்ராவின் அப்பா புனேவில் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். “அம்மா அப்பாவுக்கு அன்று திருமண நாள் 12 மணிக்கு விஷ் செய்ய வேண்டாம் மறுநாள் செய்துக்கலாம் என விட்டுவிட்டேன். ஒருவேளை நான் நள்ளிரவு பேசியிருந்தால் அப்பா அலர்ட்டாக இருந்திருப்பாரோ என்கிற குற்ற உணர்வு எனக்கு இப்போதும் உண்டு. நான்கு பேரில் நான் தான் அப்பாவுக்கு நெருக்கம். நல்ல உயரமான உடல்வாகு என்றாலும் எனக்காக டிவிஎஸ் வண்டியில் அமர்ந்தபடி என்னை அத்தனை க்ளாஸ்களுக்கும் அழைத்துச் செல்வார்” என்றார். 


மேலும், “என் பிள்ளைகளுக்கு அவர்களது 12-13 வயது வரை நான் நடிகர் என்பதே தெரியாது. அம்மா கிளாமர் ஆக்டர் எனத் தெரிவதற்கு முன்பு அவர்கள் யூட்யூபில் பல வீடியோக்களை பார்த்துவிட்டுதான் இதற்கு வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது நமது க்ளாமரெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றும். எனக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைத்ததே இல்லை என்றுதான் சொல்வேன்" என மனம் திறந்து பேசினார்.