‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தேவர் மகன் படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியது, சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 


மாரி செல்வராஜ் சர்ச்சை பேச்சு:


பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 1ம் தேதி மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ் மாமன்னன்’ படம் உருவாவதற்கு  காரணம் ‘தேவர் மகன்’ படம்தான். அந்த படத்தை பார்த்தபோது எனக்கு நிறைய வலி, மனப்பிறழ்வு, பாசிட்டிவ் , நெகட்டிவ் என அனைத்து உணர்வுகளுமே ஏற்பட்டன. படம் பார்த்த பின்னர் அந்த நாளை என்னால் கடந்து போகமுடியவில்லை. இந்த படத்தை  எப்படி  புரிந்துகொள்வது என்பதே எனக்கு தெரியவில்லை. தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம் தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்” இவ்வாறு மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.


எந்த தொடர்பும் இல்லை:


நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இவ்வாறு பேசியது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.  இந்த நிலையில் மாமன்னன் திரைப்படம் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: ”தேவர் மகன் திரைப்படம்  20 வருடங்களுக்கு முன் வந்த திரைப்படம். அதை பார்த்த பின்பு மாரி செல்வராஜ் அப்போதே கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனை ஏன் இப்போது பேச வேண்டும். அதனை கடந்துவிடுவது நல்லது. மாமன்னன் படத்திற்கும் , தேவர் மகன் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.


தேவர் மகன் படத்தில் நடித்த இசக்கி என்ற கதாபாத்திரம் தற்போது இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் மாமன்னன் படத்தின் கதை. இரண்டு படமும் வெவ்வேறு கதைக்களங்கள் கொண்டவை. தேவர் மகன் படம் சாதி பெருமை பேசும் படம் அல்ல. அது ஒரு பங்காளி சண்டையை விவரிக்கும் படம். மாமன்னன் படத்தில் சாதிக்கு எதிரான சமூக நீதியை வலியுறுத்தும் கருத்து பேசியுள்ளோம். சாதி பெருமை இருக்க கூடாது என பேசியுள்ளோம், அனைவரும் சமம் என்று பேசி உள்ளோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க 


Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial