தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான நந்தமுரி தாரக ரத்னா மரண செய்தி கேட்டதில் இருந்து அவரது மனைவி அலேக்யா ரெட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி பிறந்த நந்தமுரி தாரக ரத்னா ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார். அவரது தந்தை ஓளிப்பதிவாளர் நந்தமுரி மோகன் கிருஷ்ணா ஆவார்.  தாரக ரத்னா 2002 ஆம் ஆண்டு கோதண்டராமி ரெட்டியின் இயக்கத்தில் வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார் . தொடர்ந்து பல தெலுங்கு தெலுங்கு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த தாரக ரத்னா கடந்த ஆண்டு வெளியான 9 ஹவர்ஸ் வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்திலும் அடியெடுத்து வைத்தார். 


இதனிடையே சித்தூரில் நடந்த தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நாரா லோகேஷின் மாநிலம் தழுவிய பாதயாத்திரை நிகழ்வில் பங்கேற்க ஜனவரி 27 ஆம் தேதி சென்ற நந்தமுரி தாரக ரத்னாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 23 நாட்கள் தீவிர சிகிச்சைப் பெற்றும் சிகிச்சை பலனளிக்காமல் பிப்ரவரி 18 ஆம் தேதி காலமானார். 


39 வயதான அவரின் மரணம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் நந்தமுரி தாரக ரத்னா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தாரக ரத்னா - அலேக்யா ரெட்டி தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் இறந்த செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்த அலேக்யா ரெட்டி கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ஆடை வடிவமைப்பாளரான அலேக்யா ரெட்டியை தயா படப்பிடிப்பின் போது தாரக ரத்னா சந்தித்தார். அதன்பின் இருவரும் காதலித்து 2012 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள கோவிலில்  தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி தாரக ரத்னா அலேக்யாவை திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னரே இவர்களின் திருமணத்தை தாரக ரத்னா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். மறைந்த நந்தமுரி தாரக ரத்னாவின் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி அலேக்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.