நடிகர் சூர்யாவிற்கு சினிமா வாய்ப்பு வந்தபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?


சினிமாவில் அவ்வளவு எளிதில் நுழையமுடியாது. நுழைந்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிட முடியாது. அதனால், முறையாக ஒரு படிப்பை முடித்துக்கொள்ளுங்கள். சினிமாவில் வாய்ப்புக்கு முயற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதேபோல, ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். பின்னர், வாய்ப்பு வந்தபோது நான் முயற்சி செய்துபார்க்கிறேன் என்றார். வெற்றி கிடைத்தால் நான் சினிமாவில் தொடர்கிறேன். இல்லாவிட்டால் மீண்டும் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கே வேலைக்கு சென்றுவிடுகிறேன் என்றார்.


சரவணனில் இருந்து சூர்யாவாக மாறிய சூர்யாவின் வளர்ச்சியை ஒரு தந்தையாக எவ்வாறு பார்க்கிறீர்கள்?


சூர்யா லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வந்தார். அவர் சூர்யாவின் ஜாதகத்தை பார்த்துவிட்டு, இந்த பையன் எதிர்காலத்தில் கலைத்துறையில் மிகப்பெரிய ஆளாக வருவான் என்று கூறினார். நான் சிரித்தேன். நன்றாக பார்த்து சொல்லுங்கள் என்றேன். சிறியவனை கூறுகிறீர்களா? பெரியவனை கூறுகிறீர்களா? என்று கேட்டேன். உங்களை விட நல்ல நடிகன் என்ற விருது வாங்குவார். நான் மீண்டும் சிரித்தேன். அடுத்தது என்ன என்று கேட்டேன். உங்களைவிட அதிக ஊதியம் வாங்குவார் என்று கூறினார். நான் சத்தமாக சிரித்துவிட்டு, “ காலையில் இருந்து சாயங்காலம் வரை வாயைத் திறந்து  நான்கு வார்த்தை பேசமாட்டான். இவன் எப்படி நடிகனா வருவான்? என்று கேட்டேன்.




அதற்கு அந்த ஜோதிடர், மகாகவி காளிதாஸ் ஊமையாகதான் இருந்தார். அவர் காளியின் அருள் பெற்று மிகப்பெரிய கவிஞராக மாறவில்லையா? என்றார். பழைய கால கதைகளை சொல்ற.. போயா… என்றேன். 1991ல் அந்த ஜோதிடர் கூறியதுபோலவே, 1997ல் சூர்யா ஒரு நடிகராக மாறினார். இந்த வளர்ச்சி, வெற்றியை நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவேயில்லை. அவர் மேற்கொண்டு எந்தளவு செல்ல வேண்டும் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்திருப்பான். அவன் பார்த்துக்கொள்வான்.


சூர்யாவின் தயாரிப்பில் வெளியாகும் படங்களை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணும்?


தயாரிப்பாளராக இருக்கும்போது அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல, அவர்கள் நினைக்கும் படங்களை எடுக்க முடியும் நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அது நல்ல யோசனைதான். இந்த துறையில் நிரந்தரமான வெற்றி என்பது சிரமம். அதுவும் படம் எடுத்து வெற்றி காண்பது அபூர்வம். இந்த காலத்தில் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து படங்கள் எடுப்பது மிகவும் கடினம். நடிகர் சூர்யாவே பல படங்களில் நஷ்டம் அடைந்துள்ளார். இரண்டு படங்களில் நஷ்டம் அடைந்தாலும் மூன்றாவது படத்தில் தப்பித்துள்ளார். இதில் எனக்கு சந்தோஷம் என்று சொல்ல முடியாது. அந்த காலத்தில் புத்திசாலித்தனமாக அவர்கள் செயல்பட்டால் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பார்கள்.


வாரணம் ஆயிரம் படத்தின் அப்பா கதாபாத்திரத்தில் உங்களை பொருத்திப்பார்த்தது உண்டா?


வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தை பற்றி கூற வேண்டும் என்றால், தமிழ்சினிமாவில் எந்த நடிகருமே சூர்யா அளவிற்கு உடலை வருத்திக்கொண்டு அந்த மேக்கப் போட்டு நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. நடிகர் சிவாஜியுடன் ஒப்பிட முடியாது. அவர் நடிப்பில் நம்மை இம்பரஸ் செய்தார். உடலை இளைத்து, எலும்பாகி, கன்னம் எல்லாம் உள்ளே போகி நடிக்க யாரும் முயற்சிக்கமாட்டார்கள். இந்த பையனே எப்படி இப்படி நடித்தான் என்று எனக்கு இப்போது வரை ஆச்சரியமாக உள்ளது. அந்த படத்தில் அப்பாவின் உடல் கீழே இருக்கும். தாயிடம் மகன் அப்பா கிளம்புகிறார் என்று மகன் சொல்வார். அந்த காட்சியை பார்த்தபோது, நானே இறந்து சுடுகாட்டிற்கு செல்வது போல எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது.




சூர்யா, கார்த்தி, பிருந்தா மூன்று பேரும் என்னமாதிரி சேட்டை செய்வார்கள்?


கார்த்தியும், பிருந்தாவும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால், சேட்டை என்றால் அது சைலண்ட் கில்லர் சூர்யாதான். பள்ளிக்கு செல்லும்போது டவுசரின் கீழே சூர்யாவே பிளேடால் கிழித்துவிட்டு, அருகில் இருந்த பையன் கிழித்துவிட்டான் என்று கூறுவார். எல்லாருமே கார்த்தியை கொஞ்சுகிறார்கள் என்று சூர்யாவுக்கு ஒரு இன்பிரியாட்டி காம்பளக்ஸ். அதனால், இரவில் தூங்கும்போது பேய் மாதிரி கண்களையும், வாயையும் வைத்துக்கொண்டு கார்த்தியின்மேல் ஏறி அமர்ந்து கொண்டு சூர்யா கார்த்தியை பயங்கரமாக மிரட்டுவார். கார்த்தியை பயங்கரமாக தொல்லை செய்துள்ளார் சூர்யா.


ஆனால், கார்த்தி அமெரிக்கா சென்ற பிறகு அவருக்கு அனுப்பும் மெயில்களை அழுதுகொண்டே டைப் செய்துள்ளார். அந்த மெயில்களில் உன்னை மிகவும் டார்ச்சர் செய்துள்ளேன். எனக்கு தம்பியே வேண்டாம் என்று எல்லாம் நினைத்துள்ளேன். தைரியமாக நீ எப்படி அமெரிக்க சென்றாய்? எனக்கு அந்த தைரியமே கிடையாது. நான் முதலில் விமானத்திலே ஏறமாட்டேன். அப்படி ஏறினாலும் விமானத்தின் டாய்லெட்டிலே அமர்ந்து, அதே விமானத்தில் திரும்ப வந்துவிடுவேன். நானாக இருந்தால் அமெரிக்காவே போகமாட்டேன். உன்னை நிறைய தொல்லை செய்துள்ளேன். என்னை மன்னித்துவிடு என்று இவர் இரண்டு பக்கங்களுக்கு மெயில் அனுப்பினார். கார்த்தி அங்கிருந்த அண்ணன் என்றால் அப்படிதான் இருக்க வேண்டும் என்று அனுப்பினார். சேட்டைகளின் மன்னன் சூர்யாதான்.




சூர்யா தன்னுடைய முதல் சம்பளத்தில் உங்களுக்கு வாங்கி கொடுத்தது என்ன?


சூர்யா அவருடைய தாய்க்கு தனது முதல் சம்பாத்தியத்தில் புடவை வாங்கிக்கொடுத்தார். சூர்யா அவங்க அம்மாவிற்கு செய்ததுதான் எனக்கு பெருமை.


சூர்யாவின் எந்த படம் பார்த்து, மிகவும் பெருமிதம் கொண்டீர்கள்?


அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடித்திருந்தது. முதலில் பிடித்த படம் நந்தாதான். சூர்யாவிற்கு பலமே அவரது கண்கள்தான். அவருக்கு சிவாஜிகணேசன் போல குண்டு கண்கள். நந்தா இறுதிக்காட்சியில் அந்த குண்டு கண்களின் கீழ்பக்கத்தில் கண்ணீர் கோர்த்திருக்க, பற்களின் நடுவில் ரத்தம் வரும். அப்போது சூர்யா தனது தாயிடம் எனக்கு தெரியும் மா என்று கூறுவார். அவர் நடித்த படங்களிலே மாஸ்டர்பீஸ் அதுதான். எனக்கு மிகவும் பிடித்த படம் அதுதான்.


சோர்வடையும் தருணத்தில் சூர்யா உங்களிடம் கேட்கும் விஷயம் என்ன?


என்னிடம் வந்து சூர்யாவும், கார்த்தியும் ஆலோசனை கேட்கமாட்டார்கள். அவர்களின் முகத்தை பார்த்தாலே எனக்கு தெரியும். அந்த நேரத்திற்கு ஏற்றாற்போல உதாரணம் சொல்வேன். அப்படிதான் அவர்களை தைரியப்படுத்துவேன்.




அகரம் பவுண்டேஷன் குறித்து உங்கள் கருத்து?


அகரம் பவுண்டேஷனின் வேர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை. பாராட்டவேண்டும் என்றால், நான் தொடங்கிய அறக்கட்டளையைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். ஏனெனில் எனது அறக்கட்டளை வேராக இருந்தது. சூர்யாவின் அகரம் மரமாக வளர்ந்திருக்கிறது


வாழ்க்கைக்கும், சினிமாவுக்குமான விஷயங்களாக சூர்யா, கார்த்தி, பிருந்தாவிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் என்ன?


வாழ்க்கையும், சினிமாவையும் ஒப்பிட்டு பேசுவதில்லை. சினிமா தொடர்பான விஷயங்களை பெரும்பாலும் நான் வீட்டில் பேசுவதில்லை.


அரசியலில் சூர்யா நுழைந்தால் ஒரு நல்ல தலைவராக இருப்பாரா? அவருக்கு அரசியல் விருப்பம் இருக்கிறதா? ஒரு தந்தையா உங்கள் அறிவுரை?


அரசியலில் காந்தி, காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் போய்விட்டனர். தன் வாழ்க்கையே கட்சிக்காகவும், நாட்டுக்காவும் அர்ப்பணித்த காமராஜரையே தோற்கடித்த நாடு இது. இன்று அரசியல் என்பது சம்பாதிக்கும் துறையாக மாறிவிட்டது. மக்களுககு நல்லது செய்ய அரசியலுக்கு சென்றுதான் செய்ய வேண்டும் என்று கிடையாது. தனிப்பட்ட முறையில் அகரம் பவுண்டேஷன் போன்று செய்யலாம். எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அரசியலில் இறங்கி செய்ய வேண்டும் என்று விருப்பம் இல்லை. அது ஒரு பகடைக்காய். இன்று நாம் ஆசைப்பட்டால்கூட நாளை தோற்கடித்துவிடுவார்கள். இந்த நேரத்தில் அரசியலுக்கு செல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றுகிறது.


நன்றி : பிபிசி தமிழ்