நடிகர் சிவக்குமார் ஒரு பன்முக கலைஞர் . ஓவிய கலைஞரான சிவக்குமார் மற்ற திரைத்துறை கலைஞர்களிடம் இருந்து மாறுபட்டவர். நேர்மையான , ஒழுக்கமான நடிகர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த சிவக்குமார் தான் நடிக்க வந்த பிறகு எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்கவில்லை. ஆனாலும் தான் ஒரு நடிகையிடம் காதலை சொன்னேன் என்றும் நடிகைகள் தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் பொழுது தனது பதில் என்னவாக இருந்தது என்பது குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 





”எங்க காலக்கட்டத்துல சினிமாவை பார்க்குறது என்பது சாராயம் குடிப்பது போல , சீட்டாடுவது போல கெட்டப்பழக்கம் . நான் 7, 8 வயதில் சினிமாவை பார்த்தேன். நான் பராசக்தி படம் பார்த்த பொழுது, சிவாஜியின் வசனங்களையெல்லாம் கண்டு மிரண்டு போயிட்டேன். நான் 87 கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறேன். தங்க சிலை மாதிரி , செக்கச்செவேர்னு இருக்கும் அந்த பொண்ணு காஞ்சனா. இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து நடிச்சோம். நல்லா இங்கிலீஷ்லாம் பேசும். அதுக்கிட்ட போயிட்டு சும்மா ஐ லவ் யூனு சொன்னேன். அது என்னை பார்த்து போடா சின்ன பையா அப்படினு சொல்லிடுச்சு. அதிலிருந்தே தெரிந்தது அது பெரிய பொண்ணு அப்படினு. நான் பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவத்துல இருந்த பொழுது நடித்த நடிகைகள் எல்லாம் எனக்கு பிற்காலத்துல ஜோடியாக நடித்தாங்க. வெகு நாட்களுக்கு பிறகுதான் லக்‌ஷ்மி என்கூட நடிச்சாங்க. அப்போ குமுதத்துல “கிழங்கட்டைகளை பார்த்து அலுத்து போன கண்களுக்கு.. உண்மையில் இளமையோடு இருக்கும் இரண்டு உள்ளங்களில் அலவாடல்களை பார்க்கும் பொழுது வாழ்த்த தோன்றுகிறது“ என எழுதியிருந்தார்கள். முதன் முதலாக எனக்கு செட் ஆன கதாநாயகி. இரண்டு பேரும் நிறைய படங்கள் பண்ணோம்.  எனக்கு 56 வயது அந்த பொண்ணுக்கு 17 வயசு . ஹீரோயினா நடிக்க ஒப்பந்தம் பண்ணாங்க. சிறகடிக்க ஆசை படம் பேரு. நான் வெட்கப்பட்டேன். அதுக்கு என் பேத்தி வயது. அன்றிலிருந்து ஹீரோவாக நடிக்க கூடாதென முடிவெடுத்தேன். நான் ஓவிய கல்லூரியில் இருந்து வரும் பொழுதே வறுத்த களிமண். அதனால எனக்கு  நாயகிகளுடன் கெமிஸ்ட்ரி , அதான் கெட்டவார்த்தை அது வொர்க் அவுட் ஆகுற மாதிரி இருந்தா நான் கூப்பிட்டு சொல்லிடுவேன். “இந்த பாருமா ! திரைப்பட துறையிலும் நிறைய பத்தினிகள் இருக்கிறார்கள். எனக்கு அதில் குழப்பம் கிடையாது. வெளியிலும் நிறைய பாலியல் தொழில் பண்ணும் மக்கள் இருக்காங்க. என்னதான் இருந்தாலும் வெளியில்தான் என் வாழ்க்கை கதாநாயகியை தேடும் பொறுப்பில் இருக்கிறேன். கோச்சுக்காதீங்க அப்படினு அப்போதே டேஞ்சர் லைட் அடிச்சுடுவேன். அப்படி நிறைய பேரிடம் சொல்லியிருக்கேன்.” என்றார் சிவக்குமார்.