நா முத்துகுமார் 50

மறைந்த பாடலாசிரியர் நா முத்துகுமாரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் 'ஆனந்த யாழை ' என்கிற தலைப்பில்  மாபெரும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. தமிழ் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பொள்ளாச்சியில் பராசக்தி படத்தின்  படப்பிடிப்பை முடித்து சென்னை வந்து சேர்ந்த சிவகார்த்திகேயன்,  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார். தான் பாடல்கள் எழுதி அதில்  பெற்ற சம்பளத்தை பாடலாசிரியர் நா முத்துகுமாரின் குடும்பத்திற்கு கொடுத்ததாக சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்

நா முத்துகுமார் பற்றி சிவகார்த்திகேயன் 

" முதல்முறையாக நெல்சன் என்னை அழைத்து பாட்டு எழுத சொன்னபோது சும்மா ஜாலியாக ஒரு பாட்டு எழுதினேன். அதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அந்த வேலையை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு சம்பளாக ஏதாவது கொடுங்கள். என்னுடைய பாடலாசிரியருக்கு இது கடமையாக இருக்கிறது. இது உதவி இல்லை என்னுடைய கடமை. நா முத்துகுமார் இங்கு இருக்கும் இயக்குநர்களுக்கு , தயாரிப்பாளர்களுக்கு , நடிகர்களுக்கு , ரசிகர்களுக்கு தனது தமிழையும் , அவருடைய ஆற்றலையும்  கவிதையையும் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அவருக்கு திருப்பி செய்யும் கடமைதான் இந்த நிகழ்வு. நா முத்துகுமார் சார் உங்களை சினிமா , இசையமைப்பாளர்கள் , இந்த குடும்பம் எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம். நீங்கள் தொட வேண்டிய பாடல்கள் எல்லாம் ஒருதலை காதலாக மட்டுமே இருந்து வேறு ஒருத்தரை மணந்து போய்விட்டன என்றுதான் சொல்லனும். நிறைய நல்ல பாடலாசிரியர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மீது நான் எந்த குறையும் சொல்லவில்லை. ஆனால் உங்களை மாதிரி எழுதுவதற்கு இன்னொருவர் பிறப்பாரா என்று தெரியவில்லை. உங்களை தொடர்ந்து உங்கள் மகன் பாட்டு எழுத வரனும். நீங்கள் இல்லாததால் இங்க நிறைய கொடுமை நடக்கிறது நான் எல்லாம் பாட்டு எழுத வந்திருக்கேன். ஆனால் ஒவ்வொரு முறை பாட்டு எழுதும் போது உங்களுடைய இரு பாட்டை கேட்டுவிட்டுதான் நான் ஆரம்பிப்பேன். " என சிவகார்த்திகேயன் நா முத்துகுமார் பற்றி பேசினார்