நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பை மராட்டிய அரசு வழங்கியுள்ளது.


தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக நடிகர் ஷாருக்கான் மராட்டிய அரசிடம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து மராட்டிய அரசு அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. பதான், ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


ஒய் ப்ளஸ் பாதுகாப்பு ஏன்..? 


சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து அவருக்கு மகாராஷ்டிர அரசு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடிகர் ஷாருக் கானிற்கு மகாராஷ்டிர அரசாங்கம் Y+ பாதுகாப்பு வழங்கியுள்ளது. 


அதன்படி, ஒய் ப்ளஸ் 5 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஷாருக்கானுடன் 24 மணிநேரமும் காவலில் இருப்பார்கள். நடிகர் ஷாரூக்கான் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். முன்னதாக, அவரது பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






சமீபத்தில், 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களின் வெற்றிக்குப் பிறகு, ஷாரூக்கான் உலக அளவில் மீண்டும் தான் யார் என்பதை வசூல் மூலம் நிரூபித்தார். 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களுக்குப் பிறகு தனக்கு கொலை மிரட்டல் அழைப்புகள் நிறைய வருவதாக ஷாருக்கான் மகாராஷ்டிர மாநில அரசிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, மற்றொரு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.


உலகளவில் ரூ.1000 கோடி கிளப்பில் நுழைந்த மிக வேகமாக ஹிந்தித் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றதது பதான். இதனால், அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் தகர்த்தெறிந்து ஷாருக்கான் புதிய சாதனை படைத்தார். அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படமும் ஷாருக்கானுக்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்து வருகிறது. மேலும், இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. 


இது தவிர, உள்நாட்டு சந்தையிலும் ' ஜவான் ' தனது வலுவான கால்களை பதித்துள்ளது. இந்தியாவில், ஹிந்தியில் இதுவரை 560.03 கோடி வசூலை எட்டியுள்ளத. மேலும் படம் ரூ 600 கோடி கிளப்பில் நுழையத் தயாராக உள்ளது, மற்ற மொழி டப்களில் இருந்து ரூ 59.89 கோடி வசூல் என ஆக மொத்தம், படம் இந்தியாவில் ரூ 619.92 கோடி வசூலித்துள்ளது. 600 கோடியை கடந்து இன்னும் 1000 கோடி வசூலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


'ஜவான்' திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.