நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி விரைவில் ரிலீசாகவுள்ள படம் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


நட்சத்திர குடும்பம்


வில்லனாக இருந்து ஹீரோவாக உயர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் சரத்குமார். நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகம் கொண்ட அவர் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல் தனக்கு என்ன கேரக்டர் வந்தாலும் அதில் தயங்காமல் நடித்து சரத்குமார் ஸ்கோர் செய்வார். சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் நீண்ட அனுபவம் கொண்ட அவர் சமத்துவ மக்கள் கட்சியையும் நடித்தி வருகிறார். 


நடிகர் சரத்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கும் காலக்கட்டத்தில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரு மகள்கள் உள்ளனர். அதன்பின்னர் சாயாதேவியை பிரிந்த சரத்குமார் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக சரத்குமார் - ராதிகா தம்பதியினர் உள்ளனர். 


வரலட்சுமி நிச்சயதார்த்தம் 


இதில் சரத்குமார், ராதிகா ஆகியோர் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இன்றளவும் உள்ளனர். மகள்களில் வரலட்சுமி கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். இவரும் ஹீரோயின் தொடங்கி வில்லி வரை அத்தனை விதமான கேரக்டர்களையும் முயற்சித்துள்ளார். இதனிடையே வரலட்சுமிக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் கடந்த மார்ச் 1 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.விரைவில் இருவரும் சேர்ந்து திருமண தேதியை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகையான சாயா தேவி 


அதேசமயம் பிரிந்தாலும் முதல் மனைவி குடும்பத்துடன் சரத்குமார் நல்லுறவை பேணி வருகிறார். இந்நிலையில் முதல் மனைவி சாயா தேவி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தில் தான் அவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் , மிஷ்கின், சமுத்திரக்கனி  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 


இதனிடையே இந்த படத்தில் நடிக்க எனக்கு முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய மகள் வரலட்சுமி கொடுத்த உற்சாகத்தால் வணங்கான் படத்தில் நடித்தேன் என்று சாயா தேவி கூறியுள்ளார். இதனால் இப்படத்தை காண சரத்குமார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.