அண்ணாமலை படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சரத்பாபு, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 


சரத்பாபு கவலைக்கிடம்:


தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன், ஹீரோ நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர், சரத்பாபு. குறிப்பாக, தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்திலும் 1995ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்திலும் நடித்து பிரபலமானவர்.  இவருக்கு 71 வயது ஆகின்றது. 


கடந்த 20ஆம் தேதி ஹைதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில்  உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். நடிகர் சரத்பாபுவின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தவிர, சரத் பாபுவின் உடல் உறுப்புகள் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 


சரத்பாபுவின் திரைப்பயணம்:


1973ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ராம ராஜ்யம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு, 1978ஆம் ஆண்டு தமிழில் வெளியான நிழல் நிஜமாகிறது படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். முக்கிய கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது, துணை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் இவர். சமயங்களில், ஒரு வருடத்தில் 10 முதல் 16 படங்கள் வரை நடித்துள்ளார். சமீபத்தில், தெலுங்கு மொழியில் வெளியான வக்கீல் சாப் படத்திலும் நடித்திருந்தார். தமிழில் ரஜினிகாந்துடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் அதிக படத்தில் நடித்துள்ளார், சரத் பாபு. 


செயற்கை சுவாசம்: 


உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, இப்போது செயற்கை சுவாசத்தின் (ventilator) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் உடல் நிலை குறித்த தகவல், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.