முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் விஜயிடம் அந்த எளிமை இன்னும் மாறவில்லை என நடிகர் சஞ்சீவ் வெங்கட் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அதில் பேசிய சஞ்சீவ், “விஜயிடம் நாம் ஒரு விஷயத்தை இதை செய் என்றெல்லாம் திணிக்க முடியாது. அவருக்கு அதன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தால் கண்டிப்பாக செய்வார். அப்போது நடிப்பின் மீது ஒரு ஆர்வம் இருந்தது. அதில் என்ன விமர்சனம் வந்தாலும் அதை உடைப்போம், பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பார். அதன்மூலம் உச்சத்துக்கு போனாலும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவார். ஷூட்டிங் செல்லும்போதே இன்றைக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறோம் என்பதை திட்டமிடுவார். ஜனநாயகன் படம் நடிக்கும் வரை புதிதாக ஒருவர் சினிமாத்துறைக்குள் வந்தாலும் தனக்கு போட்டியாக தான் நினைப்பார். 

நாம் தான் உச்ச நடிகர் ஆயிற்றே.. நம்மை என்ன செய்ய முடியும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். நடிப்பில் அந்த அளவு இருந்த ஈடுபாடு தான் அரசியலிலும் தொடர்கிறது. சோசியல் மீடியாவின் பவர் இன்றைக்கு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கிறது. தினம் ஒரு நியூஸ் விஜய் பற்றியோ, கட்சியைப் பற்றியோ, அமைச்சரவையைப் பற்றியோ வந்து விடுகிறது. ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியும். 

Continues below advertisement

எனக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. விஜய் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இன்னும் ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் கூட முழுதாக முடியவில்லை. அதுக்குள்ள இவ்வளவு எதிர்பார்ப்பது ஏன்?.. விஜய் தனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என கேட்கிறார். அதைக் கொடுக்க வேண்டும். விமர்சனம் செய்பவர்கள் எதை வைத்து அதை சொல்கிறார்கள். 

சட்டசபையில் விஜய் பேசியதைக் கேட்டு ஆடிப்போய் விட்டேன். அவரா இப்படி பேசுகிறார் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு சம்பவம் விஜய் நடிகராக இருக்கும்போது நடந்தது. விஜய் இருக்கும் தெருவில் தான் நானும் இருக்கிறேன். அப்படியிருக்கும்போது ஒருநாள் என் வீட்டுக்கு டின்னருக்கு வருவதாக சொல்லியிருந்தார். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது காணவில்லை. வீட்டிற்கு மற்ற நண்பர்கள் எல்லாரும் வந்து விட்டார்கள். 

இதனால் நான் வீட்டில் இருந்து என் காரை எடுத்துக்கொண்டு விஜய் வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்த வாட்ச்மேனிடம் விஜய் எங்கே என கேட்டேன். இப்போது தான் கிளம்பி போனார் என அவர் கூற, நான் எதிரில் தானே வந்தே எந்த காரும் என்னை கடந்து போகவில்லையே என பதில் சொன்னேன். அதற்கு அந்த வாட்ச்மேன், சார் நடந்து போனாரு என சொல்ல எனக்கு ஒரு மாதிரி அதிர்ச்சியாகி விட்டது. காரணம் அப்போது விஜய் நல்ல உச்ச நட்சத்திரமாக இருந்தார். 

அது இரவு நேரம் என்ற நிலையில் ஏன் நடந்து வந்தாய் என கேட்டேன். மணி 9 ஆகி விட்டது. இந்த இருட்டுல என்னை யார் பார்க்கப் போகிறார்கள். இரவு உணவு முடிந்ததும் மீண்டும் நடந்து போகிறேன் என சொன்னார். ஆனால் நாங்கள் கேட்காமல் நண்பர்கள் அனைவரும் வீட்டில் கொண்டு போய் விட்டோம். காரணம் அந்த அளவுக்கு எளிமையாக பழகுவார். இன்றைக்கு புரோட்டாகால் காரணமாக விஜயால் நடந்து செல்ல முடியவில்லை. விஜய் நீலாங்கரைக்கு வந்து பல ஆண்டுகள் கழித்து தான் நான் இதே ஏரியாவில் தான் வீடு வாங்கினேன். அதுவும் விஜய் சொல்லித்தான் அந்த முடிவை எடுத்தேன். 

முன்னாடி நாங்கள் எல்லாரும் அண்ணாநகரில் இருக்கும் ஒரு ரோட்டு கடைக்கு சாப்பிட செல்வோம். அங்கு இப்போது அமைச்சராக இருக்கும் ஸ்ரீநாத் வீடு இருக்கும் என்பதால் சாப்பிட்டு விட்டு அங்கு செல்வோம். அந்த நேரம் விஜய் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்திருந்தார். கொஞ்சம் பிரபலமாக தொடங்கிய பிறகு வாணி மஹால் அருகே இருக்கும் சைனீஸ் ஹோட்டல் செல்வோம். தன் வீட்டு அருகே கூட ரூ.100க்கு விற்கப்படும் பிரியாணி வாங்கி சாப்பிடுவார். விஜய் வீட்டில் தானே எல்லா வேலையும் செய்வார். என்னதான் வீட்டில் பணியாளர்கள் இருந்தாலும் தானும் களத்தில் இருந்து அனைவரையும் உபசரிப்பார். முதலமைச்சரான பிறகு கூட அந்த எளிமை மாறவில்லை” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.