தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது சிங்கம் போல் ஐஸ்வர்யா வேலை செய்ததாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா அவரைப் பாராட்டியுள்ளார்.


லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால் , விக்ராந்த், தான்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார், தம்பி ராமையா, செந்தில்  உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


என் முதல் தாய்


முன்னதாக லால் சலாம் ஆடியோ லாஞ்சில் தனது தந்தையை ‘சங்கி ‘ என்று சமூக வலைதளங்களில் விமர்சிப்பது குறித்து உருக்கமாக ஐஸ்வர்யா பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் இதே போல் ஐஸ்வர்யாவை தன் இரண்டாவது தாய் எனக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார். தான் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்தபோது தன்னை ஐஸ்வர்யா தனியாக வந்து பார்த்துக் கொண்டதாக ரஜினி எமோஷனலாகப் பேசி இருந்தார்.


இந்நிலையில், முதல் முறையாக தன்னை இயக்கியுள்ள தன் மகளின் படம் இன்று வெளியாவதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மகளை வாழ்த்தி பதிவிட்டார். “என் முதல் என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


‘சிங்கம் மாதிரி வேல செஞ்சீங்க'


இதனைத் தொடர்ந்து தற்போது  நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவில் அவர் “உங்கள் படத்தின் பெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாதபோது நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை ஒரு முக்கியமான வி.ஐ.பி மூலமாக தெரிந்து கொண்டேன். விமாணப் பயணங்களை ஏற்பாடு செய்வது, உலகம் முழுவதும் மருத்துவர்களை சந்தித்துப் பேசுவது என ஒரு சிங்கம் போல் நீங்கள் வேலை செய்தீர்கள் என்று  நான் கேள்விப்பட்டவை எல்லாவற்றையும் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நினைத்துப் பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.






எஸ்.ஜே சூர்யாவின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. மேலும் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ள அந்த விஜபி தனுஷ் தான் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.