சாதி பெருமை பேசி சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாதி, மதம் வேண்டாம் என்ற சான்றிதழ் வாங்க விண்ணப்பித்துள்ளார். 

Continues below advertisement

இதுதொடர்பாக தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய தந்தையின் இழப்பு, சில படங்களால் ஏற்பட்ட கோடிக்கணக்கில் நஷ்டம் போன்றவை நிகழ்ந்தபோது கூட நான் இடிந்து போய் உட்கார்ந்தது கிடையாது. கடந்த ஒரு வார காலம் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய பாதிப்பால் நான் உடைந்து போயுள்ளேன். நான் சமூகத்தையும், சமூக வலைத்தளங்களையும் மதிப்பதால் அதன் தாக்கத்தை உணர்கிறேன். என்னுடைய பிறப்பை நான் அறவே வெறுப்பவன். அதனை பெருமையாக நினைத்தது கிடையாது. என் எல்லா படங்களிலும் இது சம்பந்தமாக நிறைய பேசியுள்ளேன். சாதி மறுப்பு கேரக்டர்களை தேர்வு செய்து நடித்திருக்கேன். 

என்னுடைய தாய்மொழி தெலுங்காக இருந்தும், தமிழ் அழகாக பேசுவேன். என்னுடைய அப்பா தமிழில் நடிக்க வேண்டுமென்றால் தமிழ் மொழியை அழகாக உச்சரிக்க வேண்டும் என சொல்வார். அப்படியெல்லாம் பயிற்சி எடுத்து தான் நான் சினிமாவுக்குள் நடிக்க வந்தேன். நான் என் வாழ்நாளில் ஒருதடவை கூட சாதி பெருமை பேசியது இல்லை. ஒரு தடவை பேசியதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக சொல்வது தான் அவமானமாக இருக்கிறது. 

Continues below advertisement

நான் தெலுங்குக்காரன் சொல்வதால் எந்த லாபமும் இல்லை. உஸ்தாத் பகத் சிங் மேடையில் ரொம்ப டென்ஷனாக இருந்தேன். தெலுங்கு பட மேடையில் தவறாக பேசிவிடக்கூடாது என்பதை கவனம் செலுத்தினேன். என் தாய்மொழியாக இருந்தாலும் தெலுங்கு சரியாக பேச வராது. பின்னால் இருந்த ஒருவர் என்னை நாயுடுவா என கேட்க, நானும் அதை சொன்னேன். அது தவறி நடந்து விட்டது. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன் என சொன்னாலும் யாரும் விடுவதாக இல்லை. 

இது மிகப்பெரிய சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. எனக்கு உண்மையில் சாதிவெறி இருந்தால் இந்த விஷயத்தை கண்டுக்கொள்ளாமல் இருந்திருப்பேன். என்னுடைய பிறப்பு சான்றிதழை மாற்ற முடியாது விளக்க வீடியோவில் சொன்னேன். பின்னர் அதை ஏன் மாற்ற முடியாது என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக நான் நீதிபதிகள் உள்ளிட்டவர்களிடம் பேசினேன். 

அதன் விளைவாக சாதி இல்லை, மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்கலாம் என நினைத்து வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். அவர்கள் சோழிங்கநல்லூர் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க சொன்னார்கள். விண்ணப்பித்துள்ளேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் ஆகியோரிடம் பேசினேன். தேர்தல் பணிகள் இருப்பதால் அது முடிந்த பிறகு இதுதொடர்பாக அரசு ஆணை வெளியிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என சொன்னார்கள். 

ஒருதொடர்பாக ஒரு ஆவணம் தயார் செய்திருக்கேன். அதில் சாதி இல்லை, மதம் இல்லை என்பது தொடரான சத்தியப்பிரமாண ஆவணம் தயார் செய்திருக்கிறேன். அரசு ஆணை வந்த பிறகு நான் சான்றிதழ் பெற்றால் திரையுலகில் சாதி இல்லை மதம் இல்லை என்ற சான்றிதழை பெறும் முதல் ஆள் நான் தான். இதுதொடர்பான விழிப்புணர்வை நடத்தவுள்ளேன்” என தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்த முடிவை பலரும் வரவேற்றுள்ளனர்.