நானா படேகர்


பாலிவுட்டிம் விமர்சன ரீதியாக பாராட்டப்படும் நடிகர்களில் ஒருவர் நானா படேகர் (Nana Patekar). சமீபத்தில் வெளியான வாக்ஸின் வார் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நானா படேகர். தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக காலா படத்தில் நடித்து கவனமீர்த்திருந்தார். இதற்கு முன்னதாக பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்திருந்தார்.


தற்போது தனது அடுத்த படமான ஜர்னியில் தற்போது நடித்து வருகிறார் . இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நானா படேகர் படப்பிடிப்புன் போது தன்னிடம் புகைப்படம் எடுக்க வந்த சிறுவன் ஒருவனை தலையில் அடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இணையதளத்தில் பலர் அவரை விமர்சித்து வந்தார்கள்.






மன்னிப்பு கேட்ட நானா படேகர்


இந்நிலையில், நானா படேகர் தான் யாரையும் அடிக்கவில்லை என்றும், ஒரு சிறுவனை அடிக்கும் வகையிலான காட்சி தன் படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும் இப்படத்தின் இயக்குநர் நானா படேகருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் நானா படேகர் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நிஜமாக என்ன நடந்தது என்று தன் தரப்பு விளக்கத்தை அவர் கூறியிருக்கிறார்.






தன்னிடம் செல்ஃபி எடுத்துக் கொள்ள வரும் ஒரு பையனை தான் அடிக்கும் வகையிலான ஒரு காட்சி படத்தில் இருப்பதாகவும்., இந்தக் காட்சிக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு சிறுவன் தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்தபோது, அவனை தான் ஜூனியர் ஆர்டிஸ்ட் என்று நினைத்து அடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.


தான் அவனை அடித்த பின்பே அந்த சிறுவன் படக்குழுவை சேர்ந்தவன் இல்லை என்கிற தகவல் தெரிந்ததாகவும், அந்த சிறுவனை மறுபடியும் அழைக்க முயற்சி செய்வதற்குள் அவன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்த யாரிடமும் தான் கராராக நடந்துகொள்பவர் இல்லை என்றும், அப்படி தான் செய்தது தவறாக இருந்தால் மக்கள் தன்னை மன்னிக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.