இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம் என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த விபரீதம் நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானியர்களை வெளியேற வேண்டும் என இந்தியா அவகாசமும் கொடுத்துள்ளது.

இந்த பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ”காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் விஜய் ஆண்டனியின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது.

இந்நிலையில், என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்கு என விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும்.

இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.