ஒரு நடிகர் நடிக்க வந்த காலக்கட்டத்தின் இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் இவர் சரியாக இருப்பார் என ரசிகர்கள் நினைப்பார்கள் . அது பல தருணங்களில் பொய்த்தும் போனதில்லை. அப்படியான ஸ்டீரியோ டைப்பை உடைப்பதற்கு நடிகர்களுக்கு பல வருடங்கள் எடுக்கும். ஆனால் அதையெல்லாம் அடுத்தடுத்த படங்களிலேயே உடைத்தெறிந்தவர் ‘நவரச நாயகன்’ கார்த்திக். இன்று (செப்டம்பர் 13 ) அவரது பிறந்தநாள்.




’முரளி ‘ ‘ கார்த்திக்’ ஆன கதை :


பாரதிராஜா கண்டெடுத்த நட்சத்திரம்தான் கார்த்திக் . பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்திற்கான கதாநாயகனை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நேரம் அது. ஷூட்டிங் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவருக்கு, கதாநாயகன் மட்டும் அமையவே இல்லை. இப்படியான சூழலில் பாரதிராஜா காரில் சென்றுக்கொண்டிந்த வழியில் , ஒரு சிறுவன் சைக்கிளோடு வந்து குறுக்கே விழ , அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு , வெளியில் இருந்த மரத்தில் சாய்ந்தபடி காத்திருந்தாராம் பாரதிராஜா. அருகில்தான் நடிகர் முத்துராமனின் வீடு. பால்கனியில் இளைஞனான ‘முரளி’ விளையாடிக்கொண்டிருக்க , அதை கண்ட பாரதிராஜா ‘இதோ கிடைத்துவிட்டான் ‘ என முத்துராமன் வீட்டிற்கு சென்று , பேசி சமாதானம் செய்து அடுத்த நாளே படப்பிடிப்பிற்கு முரளியை அழைத்துக்கொண்டு இரயிலில் ஷூட்டிங் புறப்பட்டார். அந்த படம்தான்  அலைகள் ஓய்வதில்லை . முரளியை நடிகனாக மட்டுமல்ல ! கார்த்திக்காவும் அறிமுகம் செய்து வைத்தது. 




நவரச நாயகன் :



முதல் படத்தில் சாதுவான இளைஞனாக நடித்திருந்தாலும் , அடுத்த படம் நினைவெல்லாம் நித்யா , அந்த படம் கார்த்திக்கிற்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் அவரது நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . அதே வருடத்திலேயே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார் , ஏகப்பட்ட வரவேற்ப்பு .வாரிசு நடிகர்கள் என்றாலே அப்பாவின் பெயரால்தானே அடையாளம் காணப்படுவார்கள் . ஆனால் கார்த்தியின் அப்பாதான் முத்துராமன் தெரியுமா ? என  ரசிகர்கள் பேச துவங்கியதுதான் ஹைலைட் .  ரொமான்ஸ் செய்வார் என்ற நேரத்தில் , எமோஷ்னலாக நடித்திருந்தார், சரி இதுவும் வரும் போல என முடிவுக்கு வந்த நிலையில் ஆக்‌ஷனில் இறங்கினார் , பராவியில்லையே என கூறி முடிப்பதற்குள் காமெடியிலும் களமிறங்கினார். கொடுத்த பட்டத்திற்கு ஏற்ப ‘நவரசத்திலும் ‘ வித்தகராகத்தான் இருந்தார் கார்த்திக். அதே நேரம் அவரது வித்தியாசமான குரலும் அவரை தனித்துவமாக அடையாளப்படுத்தியது. இடையிடையே பாடகராகவும் வந்து போனார். குறிப்பாக ‘வெத்தலை போட்ட  சோக்குல “ என்னும் பாடல் இன்றும் ஏதோ ஒரு மூலையில் ஒளித்துக்கொண்டுதானே இருக்கிறது.




ஒரே ஒரு கார்த்திக்தான் :


ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி என்பார்களே ! ஏதாவது ஒரு நடிகையுடன்தான் நடிகர்கள் திரையில் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் . ஆனால் கார்த்திக்குடன் நடித்த அத்தனை நாயகளிலுமே திரையில் அவ்வளவும் பொருத்தமாக இருப்பார்கள்! அதில் கார்த்திக்கின் பங்கும் உண்டு! அக்னி நட்சத்திரம் , கிழக்கு வாசல் , மௌன ராகம் , வருஷம் 16, பொன்னுமணி , பூவரசன் , மேட்டுக்குடி , கோகுலத்தில் சீதை , பிஸ்தா , சுயம்வரம் என கார்த்தியின் நடிப்பிற்கு சான்றாக ஏகப்பட்ட படங்கள் உள்ளன.  மௌன ராகம் படத்தில் சிறு காட்சிகளில் வந்து போனாலும் , அந்த படத்தில் அவ்வளவு ஹேண்ட்ஸமாக இருக்கும் கார்த்திக்கிற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்களே ! தமிழ் சினிமாவில் கார்த்திக் என்னும் நடிகர் பதித்த முத்திரையை வேறு யாராலும் முறியடிக்கவே முடியாது!