பொன்னியின் செல்வன் போன்றதொரு படத்தை எடுக்க இன்னொரு இயக்குநர் பிறந்து வரவேண்டும் என்று நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார்.


சென்னையில்  ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான  ‘பொன்னி நதி’ பாடல் வெளியீடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “என்ன மாமா செளக்கியாமா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது நம்ம படம். தமிழர்களின் படம். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தாலும், இந்தப்படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருக்கிறது.


 


 


 


                                         


ஜெயராம் சார் கூட நடிச்சது ஒரு பாக்கியம்


ஜெயராம் சார் கூட நடிச்சது ஒரு பாக்கியம். நானும் ஜெயம் ரவியும் பேசிக்கொள்ளும் போது சொல்வோம். அவர்தான் நடிகர் .. நாம் வெறும்  ‘ந’ மட்டும்தான். ஆழ்வார்கடியான் நம்பி கதாபாத்திரத்தில்  ஜெயராம் சார் நடித்தது என்பது நம்பவே முடியல. நம்பி கதாபாத்திரம்  5 1/2 அடி , இவர் 6 1/2 அடி.. உயரத்தை குறைக்க ஜெயராம் ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார். 


6.30 மணிக்கு முதல் ஷாட்


நதிகள்தான் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அன்று பொன்னி நதி. இன்று காவேரி. படத்தை எடுக்க முடியாது என்று பல பேர் சொன்னார்கள். படம் தொடங்கும் போது கோவிட் வந்து விட்டது. 120 நாளில் பொன்னியின் செல்வன் பாகம் 1 பாகம் 2 இரண்டையும் மணி ரத்னம் எடுத்து முடித்து விட்டார். படப்பிடிப்பில் 2.30 மணிக்கு மேக்கப் போடுவார்கள். மேக்கப் போடுவதற்காக 30  பேர் தயாராக இருப்பார்கள். 6.30 மணிக்கு முதல் ஷாட் வைப்போம். இந்த மாதிரி படம் எடுக்க இன்னொரு இயக்குநர் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும்.


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டது. 


கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.