டாஸ்மாக் கடைகள் தவெக ஆட்சியில் சீக்கிரம் அடைக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு வேதனை தெரிவித்துள்ளார். அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன் ஆகிய படங்களை இயக்கிய ராம்தேவ் அடுத்ததாக “மக்கள் தலைவா” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரவிமரியா, ராதாரவி, இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவிதாலயா சரவணன், சந்திரசேகர், ராம்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு துளசி ராயன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
மதுபான பாரில் நடந்த கூத்து
மக்கள் தலைவா பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, “இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் சினிமாக்காரர்களுக்கு அண்ணன் போன்றவர். அவர் வீட்டுக்கு சென்றால் உணவு போட்டு ஒரு பெரிய திருப்பதி பெருமாள் படம் அன்பளிப்பாக கொடுப்பார். நான் விரைவில் தலைவனாக மாறி விடுவேன். இந்த படத்தின் இயக்குநர் ராம்தேவ் தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அதற்காக மெனக்கெடுவார்.
ஷூட்டிங் ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு போன் செய்து உங்களுக்கு தான் முதல் ஷாட் வைக்கிறோம். சரியாக 4 மணிக்கு டாஸ்மாக் பாருக்கு வந்து விடுங்கள் என சொன்னார். நானும் சரியாக அங்கு சென்றால் பார் மற்றும் டாஸ்மாக் கடை பூட்டி இருந்தது. ரொம்ப நேரம் காத்திருந்து பார்க்கிறேன். உடனடியாக அங்கிருக்கும் பாரின் கதவை தட்டினேன். அன்றைய நாள் டாஸ்மாக் லீவு என்ற நிலையில் உள்ளே இருந்து தலைகாட்டிய நபர், அண்ணே இன்னைக்கு பிளாக்ல சரக்கு கிடைக்காது என சொன்னார். அதற்கு நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்துள்ளேன் என கூறினேன். அந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது.
Also Read: தவெக ஆதரவில் இருந்து பின்வாங்குகிறதா விசிக? - திருமா எடுத்த முடிவு.. ஆதவ் அர்ஜூனா ஓபன் டாக்!
டாஸ்மாக் நேரம் - கஞ்சா கருப்பு கோரிக்கை
உடனே என்னை அங்கேயே காத்திருக்க சொன்ன நிலையில், நான் 2 பீர் வாங்கி கொடுங்கள். நான் குடிச்சிட்டு உள்ளே வந்து நடிச்சிடுறேன் என சொல்ல, இன்னைக்கு கடை லீவு என காரணம் சொன்னார்கள். இந்த படம் வெளியானால் மது குடிப்பவர்கள் இப்படத்தில் நடித்த பேரரசு வீட்டில் போய் நிற்பார்கள். பாட்டில் விலை ரூ.10 அதிகமாக வாங்குவது பற்றி அவர் பேசியுள்ளார். அதனால் அதனை குறைப்பது பற்றி விவாதிப்பார்கள்.
த.வெ.க ஆட்சியில் சீக்கிரம் டாஸ்மாக்கை மூடி விடுகிறார்கள். 9.45க்கு கடை அடைக்கப்படுகிறது. அதனை காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை கடையை திறக்க வேண்டும். ஆங்காங்கு குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் கஞ்சா கருப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் பேச்சால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
