நடிகர் லொள்ளுசபா வெங்கட் ராஜ் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு யாருமே எட்டிப் பார்க்கவில்லை என நடிகர் காதல் சுகுமார் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
லொள்ளுசபா பார்த்தவர்களால் நிச்சயம் வெங்கட்ராஜை மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு அதில் அல்டிமேட்டாக காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மனிதன், டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி என சினிமாவில் தனக்கு கிடைத்த வேடங்களில் எல்லாம் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இப்படியான நிலையில் 68 வயதான வெங்கட்ராஜ் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைக்கு வெகு சில பெரிய திரை, சின்னத்திரை பிரபலங்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் நடிகர் காதல் சுகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், “நடிகனா இருந்தா கூட காசுபணம் நல்லா சேர்த்து வச்சாதான் செத்தது கூட செய்தியா வரும். 30 வருஷமா இந்த மனுஷன் மேலயும் போகல கீழேயும் போகல... உடம்பை மாதிரியே நலிஞ்சி போய்தான் வாழ்ந்திருக்காரு. மீடியா எட்டிக்கூட பாக்கல... அதாவது பரவால்ல இவர் கூட டிராவல் பண்ணி இன்னைக்கு பெரிய நடிகரா இருக்கவங்க கூட வரல.. ஆனா இதான் யதார்த்தம். மீடியால இவருக்கெல்லாம் TRP வராது.. அதான் வரல போல..எல்லாரையும் சிரிக்க வச்சவர் சாவுல அழுவுறதுக்கு கூட ஆளு இல்ல” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சந்தானம் லொள்ளுசபா மூலம் திரையில் அறிமுகமானார். அவர் சினிமாவில் காமெடி நடிகராக வளர்ந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார். எனினும் வெங்கட்ராஜூடன் பயணித்த பலரும் சினிமாவில் இருந்தாலும் அவர்கள் தங்களது கமிட்மெண்டுகளில் சிக்கிக் கொண்டதால் அவரின் இறப்புக்கு வர முடியவில்லை என சொல்லப்படுகிறது. எனினும் சமீப காலமாக திரைத்துறையில் யாராவது மரணித்தால் அவருடன் பயணித்தவர்கள், உடன் நடித்தவர்கள் இறப்புக்கு செல்லாமல் தவிர்த்து வருவது அதிகரித்து வருவதாக இணையவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குறைந்தப்பட்சம் இரங்கல், பிறிதொரு நாளில் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பது கூட இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
