விஷ்ணு விஷால், அமீர் கானுக்கு உதவிய அஜித்


மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒருவர். அவருடன் தன்னுடைய தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மீட்பு படையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். இந்தத் தகவலை தனது நெருங்கிய நண்பர்கள் வழி அறிந்துகொண்ட நடிகர் அஜித் குமார் விஷ்ணு விஷால், அமீர் கான் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களின் அடுத்தகட்ட பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.


இந்தத் தகவலை நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தொடர்ந்து அமீர் கான், விஷ்ணு விஷால், அஜித் குமார் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது.


அஜித்தை விமர்சித்த நடிகர் போஸ் வெங்கட்


இந்நிலையில்,  நடிகர் அஜித் குமாரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் நடிகர் போஸ் வெங்கட் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு.. இங்கிருக்கும் அத்தனை வட நாட்டவரையும் தமிழகம் காக்கும்... (உங்களுக்குள் நல்ல இணைப்பு உண்டு).. ஆனால் உங்களை விரும்பும்.. டிக்கெட் எடுத்து உங்களை பார்க்கும் ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை. (ஒரு போட் அவனுக்கும் விட்டிருக்கலாம்)” என்று அவர் பதிவிட்டு இந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். .