தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் கவுண்டமணி. இவரது மனைவி சாந்தி. இவர் இன்று காலமானார். அவரது மறைவு கவுண்டமணிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டமணியின் நெருங்கிய உறவினர் கே.எஸ்.ரவிக்குமார்:
இந்த நிலையில், நடிகர் கவுண்டமணி மனைவியின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கவுண்டமணி கே.எஸ்.ரவிக்குமாரின் மிகவும் நெருக்கமான உறவினர் ஆவார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அறியாத தகவலாகவே இருந்தது. இந்த நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமாரும் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உறவினரானது எப்படி?
அஞ்சலி செலுத்திய பிறகு அவர் கூறியதாவது, கவுண்டமணி சார் விஷயத்துல மத்த சினிமாக்காரங்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்னா நான் அவரு சொந்தக்காரர். என்னுடைய மாமா மகன்தான் அவருடைய மூத்த பெண் செல்விக்கு திருமணம் செய்துள்ளார். அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நாட்டாமை படப்பிடிப்பின்போது என்னிடம் ரவி என் பொண்டாட்டி முதலியார்லதான் பையன் வேணும், பையன் வேணும்னு சொல்லிகிட்டே இருக்காங்க. ஏதாவது இருந்தா சொல்லு ரவினு சொன்னாரு. என் மாமா பையன் 2, 3 வரன் சொன்னேன். மாமா பையன் ஓகே ஆனுச்சு. அவன் பிர்லா இன்ஸ்ட்டியூட்ல எம்பிஏ படிச்சுகிட்டு இருந்தான்.
அப்போது முதலே கவுண்டமணி சார் எனக்கு நடிகராக மட்டுமில்ல உறவினராகவும் மாறினார். அவரு மனைவியும் நல்ல பழக்கம். கவுண்டமணி சாரை பாக்கவும்தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தளர்ந்து போன மாதிரி இருக்காரு. அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை. அவரது ஆத்மா சாந்தியடையை இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்தனை படங்களா?
நடிகர் கவுண்டமணியின் உறவினர் கே.எஸ்.ரவிக்குமார் என்பது பலருக்கும் தெரியாமலே இதுநாள் வரையில் இருந்தது. இன்று கே.எஸ்.ரவிக்குமாரே தாங்கள் இருவரும் எவ்வாறு உறவினர்கள் ஆனார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பேண்ட் மாஸ்டர், நாட்டாமை, முத்து குளிக்க வாரியா, பெரிய குடும்பம், பரம்பரை, சமுத்திரம் ஆகிய படங்களில் கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், செந்தில், நிழல்கள் ரவி, வையாபுரி உள்ளிட்ட பலரும் இரங்கல் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.