Lokah OTT: நடிகர் துல்கர் சல்மான் தனது தயாரிப்பில் உருவாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற லோகா திரைப்படம் ஓடிடி பக்கத்தில் வெளியாகுமா என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் ரசிகர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றையும் வைத்த்துள்ளார்.
வசூலில் கலக்கும் லோகா :
மலையாள சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று பாராட்டப்படும் ’லோகா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. திரையங்கில் வெளியான இந்த படம் இதுவரை சுமார் 275 கோடி வரை வசூல் செய்துள்ளது. பல்வேறு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
ஓடிடி-யில் வெளியாகுமா?:
இச்சூழலில் தான் லோகா திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான துல்கர் சல்மான் இதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”லோகா (Lokah) விரைவில் OTT-க்கு வரப்போவதில்லை. போலி செய்திகளைப் புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருங்கள்!”என்று கூறியுள்ளார்.
முன்னதாக லோகா திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,” எங்கள் படம் உங்களால் மட்டுமே சாத்தியமான எண்ணிக்கையை எட்டியது. பார்வையாளர்களாகிய உங்களால் மட்டுமே. என்னால் பேசமுடியவில்லை. இந்தப் படத்தின் மீது பொழிந்த அன்பிற்கு உண்மையிலேயே நன்றியுடன் இருக்கிறேன். எங்கள் துறையில் கதை எப்போதும் ராஜாவாக இருந்து வருகிறது.
அது தான் முக்கியம் என்பதை நீங்கள் எங்களுக்கு நிரூபித்துள்ளீர்கள். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கதைகள் எப்போதும் உங்களுடன் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கும் என்பதைக் காட்ட எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி." என்று கூறியுள்ளார்.