தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குநர் , தயாரிப்பாளர், கதை ஆசிரியர் , கவிஞர் , டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் பார்த்திபன். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் அணுகும் பார்த்திபன் வித்தியாசமான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். முதல் படமான புதிய பாதை தொடங்கி , சமீபத்திய படைப்பான இரவின் நிழல் வரையிலும் பார்த்திபனின் தனித்துவனமான முயற்சிகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியவை.


ஆனால் இத்தனை பெரிய வளர்ச்சிக்கு பின்னால் பார்த்திபன் ஒளித்து வைத்திருக்கும் சோகங்களும் , அனுபவங்களும் ஏராளம். அதனை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன்.







அதில் ”ஒரு பத்து பைசா சம்பாதிக்காம வீட்டுக்கு போய், சாப்பிட மனசு இடம் கொடுக்கல. அதனால் ஒரு வாடகை ரூமில் தங்கியிருந்தேன். அது 10-க்கு 10 ரூம். 7 பேர் தங்கியிருப்போம். இரண்டு பேர் கால் நீட்டி படுக்கலாம். மூன்று பேர் கால் மடக்கி படுக்கலாம். மற்றவர்கள் பிளாட்பார்ம்லதான் தூங்கணும். நான் நிறைய படங்கள் பார்த்துட்டு வருவேன். ஒரு பீர் குடிச்சுட்டு பிளார்ட்பார்ம்ல தூங்குவேன். அப்பா என்னை தடுக்கல. காரணம் என்னுடைய கனவை தடுக்க வேணாம்னு அவர் நினைச்சார்.


நான் படிச்ச படிப்புக்கு அப்போ 300 ரூபாய் சம்பளம். ஆனால் அதை வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்கணும்னு அப்பா நினைக்கல. கேக்கவும் இல்ல. அவர் கொஞ்சம் சொல்லியிருந்தாலும் கூட நான் சினிமாவை விட்டு பின்வாங்கியிருப்பேன். அதுக்குப்பிறகு கொஞ்ச காலம் கழித்து மது ஒழிப்பு பிரச்சாரம் , டப்பிங், டிவி சீரியல் அப்படி கிடைத்த எல்லா வேலைகளையும் செஞ்சேன். மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைச்சுது.


இந்த சூழல்லதான் இயக்குநரிடம் உதவியாளராக சேர்ந்துவிடலாம்னு தோணுச்சு. அப்போது இயக்குநர் பாக்கியராஜ், எனக்கு 300 ரூபாய் செலவிற்காக கொடுக்குறதா சொன்னாரு. அதற்கு பெயர் சம்பளம் கிடையாது. சம்பளம் நாமளே இயக்குநர் ஆனால்தான் கிடைக்கும். அப்போ எனது அப்பாவிற்கு கேன்சர். மயிலரா அப்படின்னு ஒரு மாத்திரை அதோட விலை அப்போவே 270 ரூபாய். இப்போ அது அதிகமாக கிடைக்குது. 35 வருடங்களுக்கு முன்னாடிஅதெல்லாம்  கிடைக்காது. கிடைக்கும் 300 ரூபாயில் 270 ரூபாய் போனா, மிச்சம் 30 ரூபாய் , அந்த பணத்தில 4 பேர் சாப்பிடணும்னா எப்படி சாத்தியம். ஆனாலும் 6 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்ச நான் 300 ரூபாய்க்கு சினிமா வேலை பாக்க சரின்னு உடனே சொன்னேன். அதுதான் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. இப்படியான கடினமான சூழல் வந்தப்போ கூட, நான் அந்த முடிவை எப்படி எடுத்தேன்னு நினைக்கிறதுதான் எனக்கே ஆச்சர்யம் “ என்கிறார் பார்த்திபன்.