தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் இயக்குநராக பரிணாமம் எடுத்து தன்னுடைய 50வது படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ்ராஜ், வரலட்சுமி சரத்குமார், சரவணன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26ம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 




ராயன் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் இந்த சூழலில் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள முத்துராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது  மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவில்.  அந்த ஆலயத்துக்கு மகன்களுடன் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாயார், சகோதரிகள்  என அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.  


ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து  வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் தனுஷ் குடும்பத்தினர். அந்த வகையில் தன்னுடைய 'ராயன்' திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். 






 


நடிகர் தனுஷ் கோயிலில் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "இங்கு பரந்து கிடக்கும் பூமி, உனக்கும் தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும், உனக்கும் சொந்தமைய்யா…" என்ற கேப்ஷனுடன் போஸ்ட் ஒன்றை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 


அங்கு ஊர் மக்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.