கன்னி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நடிகர் கூல் சுரேஷ் பெண் வேடத்தில் வந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 


மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கன்னி”.இந்த படத்தில் அஸ்வின் சந்திரசேகர், மணிமாறன், ராம் பரதன், தாரா க்ரிஷ் என பலரும் நடித்துள்ளனர். மே 17 ஆம் தேதி வெளியாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் கூல் சுரேஷ் பாவாடை, தாவணி அணிந்து வருகை தந்திருந்தார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் மேடையேறும் போது பாவாடை, தாவணி எல்லாம் போட்டுட்டு சரியாக ஏற முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு சால்வை அணிவித்து காப்பாற்றி விட்டார். கன்னி என்ற வார்த்தையே ஸ்பெஷல் தான். எனக்கு இந்த உடை அணிந்து வருவதே கஷ்டமாக இருக்கிறது. அப்படி என்றால் கன்னி என்ற படத்தை இயக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என தெரிகிறது. நான் இந்த மாதிரி உடை அணிந்து போனால் எங்கள் வீட்டில் பாராட்டவா செய்கிறார்கள். நான் பாவாடை தாவணியில் வந்தது 3வது மனிதருக்கு கேலிப் பொருளாக தெரியலாம். ஆனால் இந்த படத்தில் நான் நடிக்காவிட்டாலும் என்னுடைய இந்த சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என நினைத்து தான் அணிந்து வந்தேன். 


கூல் சுரேஷ் என்றாலே ஜாலியாக இருப்பார் என சொல்கிறார்கள். நான் அழுதால் நல்லா நடிக்கிறான் என கமெண்டுகளில் போடுகிறார்கள். நான் நல்லா நடிப்பேன் என இயக்குநர், தயாரிப்பாளருக்கு அல்லவா தெரிய வேண்டும். இந்த நேரத்தில் பேரரசுவிடம் வேண்டுகோள் வைக்கிறேன். மீண்டும் வெகுவிரைவில் படம் இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நான் எமோஷனலாக பேச மாட்டேன். அப்படி பேசினால் என்னுடைய கன்னித்தன்மை போய்விடும்” என கூல் சுரேஷ் கூறினார். 


இதனிடையே பேசிய இயக்குநர் பேரரசு, ”கன்னி  படத்தின் விழாவுக்கு ஹீரோயின் வரவில்லை. அதற்கு பதிலாக பெண் வேடத்தில் கூல் சுரேஷ் வந்து விட்டார் என நினைக்கிறேன். நல்லவேளை இப்படத்துக்கு நிர்வாணம் என டைட்டில் வைக்கவில்லை. இனிமேல் டைட்டிலை பார்த்து விட்டு தான் கூல் சுரேஷை கூப்பிட வேண்டும். அவர் ஆம்பளையே இல்லையாம். வேடம் போட்டதும் பெண்ணாக மாறி பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். அவரின் மெனக்கெடல் யாருக்கு வரும் சொல்லுங்கள்” என பாராட்டினார். இதனைக் கேட்டு கூல் சுரேஷ் கண் கலங்கினார்.