நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தைப் பார்த்த நடிகர் அருண்விஜய் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூலை 14 ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ படம் வெளியானது. ப்ரின்ஸ் படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த ரசிகர்களுக்கு மாவீரன் படத்தின் வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில்குமார், யோகிபாபு, திலீபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். 


மாவீரன் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், வசூலில் 4 நாட்களில் ரூ.50 கோடி கலெக்‌ஷனைப் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது. மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி சம்பளம் எதுவும் வாங்கமால் படம் நெடுகிலும் வரும் பின்னணி வசனங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். முன்னதாக படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 


சிவகார்த்திகேயனுக்கு என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நிலையில், கடந்த 5 நாட்களாகவே தியேட்டர்களில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியது. இந்த படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும் பல பிரபலங்களும் மாவீரன் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர். 


அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அருண் விஜய் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போதுதான் மாவீரன் படத்தைப் பார்த்தேன்.. முழுமையாக ரசித்தேன். சகோதர் சிவகார்த்திகேயன் நீங்கள் உங்களுக்கான கேரக்டரை உணர்ந்து எளிமையா, அழகா நடிச்சிருக்கீங்க. யோகிபாபுவின் காமெடியையும், விஜய் சேதுபதியின் அசசரீ குரலையும் விரும்பி பார்த்தேன். இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.