நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டு சென்ற புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்து வருகிறார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. 






இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. 






இதற்கிடையில் படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்களின் ஏக்கங்களை போக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் இரு தினங்கள் முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் அஜித்தை பார்க்கும் போது கண்டிப்பாக இப்படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இந்நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கும் வகையில் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று தாய்லாந்து புறப்பட்டு சென்றனர். விமான நிலையத்தில் கோட் சூட்டுடன் கெத்தாக வரும் அஜித், அங்கு ஊழியர்களிடம் சிரித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.