தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமானார். மறைந்த சுப்பிரமணித்தின் உடல் இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.


சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 3.15 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.  இது நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகர் அஜித்தின் தந்தை காலமான செய்தி அறிந்த திரைத்துறையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் பலர் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று மறைந்த சுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


அதேபோல், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 


தமிழ் சினிமாவில் தன் விடாமுயற்சியால் தன்னை புகழின் உச்சத்தில் நிலைந்றுத்திக் கொண்டவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு திரையுலகிற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்கள் ஏராளம். 


இது குறித்து நடிகர் அஜித் குடும்பத்தினர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “


எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.


கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தோம். எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.


இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.


எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பயும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் - அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.