மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரம் தொடர்பாக நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்க குற்றம் சாட்டிய நிலையில் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ரவி மோகன், பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரவி மோகன் மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதேசமயம் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ஏற்பட்ட உறவு காரணமாக தான் ரவி மோகன் விவாகரத்து முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. ரவி மோகன் - கெனிஷா ஜோடியாக சுற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் காதலில் இருந்து வெளியேறுவதாக கெனிஷா பதிவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  இன்று காலை ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் மீது பல குற்றச்சாட்டுகளை கண்ணீர் மல்க தெரிவித்தார். அதேசமயம் பிரபல நடிகை ஒருவர் தான் இந்த பிரச்னைக்கு காரணம் எனவும் கூறினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தளங்களில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Continues below advertisement

இந்த நிலையில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இன்றைக்கு காலையில் நடந்த விஷயம் மிகவும் துயரமானது. ஏனென்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட அத்தனை அவதூறுகளும் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனை இன்னைக்கு மேடை போட்டு பேசியிருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நாங்கள் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் ரவி மோகனுக்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். நான் அழமாட்டேன், உணர்ச்சிவசப்பட மாட்டேன். காரணம் நாங்கள் எந்த தப்பும் பண்ணல. 

அத்தனை விளக்கங்களுக்கும் நாங்கள் பதில் கொடுப்போம். ஆதாரத்துடன் விரைவில் வந்து சந்திக்கிறேன். 16 வயதுடைய மூத்த மகனான என்னுடைய பேரன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். அவனுக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலில் இருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுக்குமேலேயும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் கொடுக்காதீர்கள். என்மேல் வைக்கப்பட்ட அவதூறுகளுக்கும் பதில் கொடுப்பேன். 

பிள்ளைகளை பார்க்கவே விடுவதில்லை என சொல்வதில் உண்மையில்லை. 2008ல் ஒரு நேர்காணலில் யார் கையை அறுத்துக்கொண்டார் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. என்னுடைய மகள்களுக்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். 2 வருடம் முன்னாடி எந்த விஷயமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்போது என்ன முடிவு எடுத்திருக்கிறார் என தெரியவில்லை. ரவிமோகன் மீது இப்போதும் மரியாதை இருக்கிறது. அவரைப் பற்றி நாங்கள் தவறாக பேச மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.