நயன்தாரா..


தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கட்டிப்போட்டுள்ளார். 


இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவே தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவரவே இல்லை. 


நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். பரஸ்பர மரியாதையுடன் காதலித்து வரும் இவர்கள், சினிமாவிலும் ஒன்றிணைந்து படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி விநியோகம் செய்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.






ரவுடி பிக்சர்ஸ்..


இவர்களின் படத்தயாரிப்பின் நிறுவனத்தின் பெயரான ரவுடி பிக்சர்ஸ் தற்போது சர்ச்சையாகியுள்ளது.  சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த  கண்ணன் என்ற சமூக ஆர்வலர்  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ரவுடிகளை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நயந்தாராவும், விக்னேஷ் சிவனும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது.  






எனவே அந்த தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரானும் ரவுடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதனை அடையாளமாகக் கொண்டு ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தப் பெயரை மாற்றலாம் என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.