கேன்ஸில் இந்திய திரைப்படங்களுக்கான மரியாதை


கேன்ஸ் திரைப்பட சந்தை


கேன்ஸ் விழா எனப்படும் சர்வதேச திரைப்படங்களுக்கான திருவிழா நடைபெறும் அதே நாட்களில் திரைப்படங்கள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் கேன்ஸில் நடைபெறுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு, கேன்ஸ் திரைப்பட சந்தை எனும் வகையில் நிகழும் Marche' Du Film. இது ஆங்கிலத்தில் Cannes film market எனவும் அழைக்கப்படுகிறது. 75 ஆண்டுகளாக நடைபெறும் கேன்ஸ் விழாவில் கேன்ஸ் திரைப்பட சந்தையும் பல ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தாலும் இந்த ஆண்டு இந்தியாவிற்கானது என்றால் மிகையில்லை.  ஆம், இந்த ஆண்டு நடக்கும் நிகழ்வில் சுமார் 110-க்கும் மேற்பட்ட நாடுகளின் சார்பாக 12,000-க்கு அதிகமான திரைப்பட ஆர்வலர்களும், திரைத்துறை வர்த்தகர்களும், திரைப்பிரபலங்களும் பங்கு பெறுகிறார்கள். அதில், பல்வேறு உட்பிரிவுகளின் கீழ் 1000-ற்கும் அதிகமான திரையிடல்கள் நிகழ உள்ளன. குறிப்பாக, இந்த நிகழ்வில் Country of Honour எனும் பிரிவை இந்த ஆண்டு கேன்ஸ் விழாக்குழு உருவாக்கியுள்ளது.  பெருமைக்குரிய அம்மரியாதையைப் பெறும் முதல் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


முதல் அங்கீகாரம்


பெருமைக்கும் சிறப்பிற்குரியதான இவ்விழாவின் துவக்க நாளில் இந்திய கலாச்சாரம், கலை, இந்திய சினிமா மற்றும் பண்பாடு குறித்த காட்சிகள் இடம்பெறுவது சர்வதேச சமூகத்தின் முன்பாக இந்தியாவிற்கு கலை மற்றும் இந்திய சினிமாவிற்கான அங்கீகாரமாக கருதப்படும் என்பதில் மாற்றில்லை. இந்தியாவின் சார்பாக கேன்ஸ் விழாவின் போட்டிப் பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான ”கூலாங்கல்” தேர்வாகவில்லை. ஆனாலும், ஆவணப் படங்களுக்கான சிறப்பு திரையிடல் பிரிவில் ஷானக் சென் இயக்கியுள்ள ”ஆல் தட் பிரீத்ஸ் ( All that Breathes )-ம்”,  குறும்படப் பிரிவில் ப்ரதம் குரானா இயக்கிய ”நோஹா ( Nauha )-வும்” திரையிடப்படுவது சிறப்பு வாய்ந்ததாகும். கிளாசிக் செலக்சன் பிரிவில், அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சர்வதேச திரை சமூகத்தை இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் சத்தியஜித் ரே மற்றும் மலையாள இயக்குனர் கோ அரவிந்தனுடைய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சத்தியஜித் ரேவின் ப்ரதித்வந்தி ( Pratidwandi ) மற்றும் அரவிந்தனின் தம்பு ( Thampu )  தேர்வாகியுள்ளன.


சிறப்பு திரையிடல்கள்


கேன்ஸ் திரைப்பட சந்தையில் சிறப்பு திரையிடல்களுக்காக இந்தியாவின் சார்பில் திரையிடப்படும் திரைப்படங்களை இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பல்வேறு கூறுகளை ஆராய்ந்து தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.  அவ்வாறு திரையிட ஆறு திரைப்படங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.


 


1.ராக்கெட்ரி : த நம்பி எஃபெட் ( Rocketry : the nambi effect – Tamil, hindi and more )


வானியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள படம் ராக்கெட்ரி : த நம்பி எஃபெட் ( Rocketry : the nambi effect ). இந்த படம் இயக்கப்பட்டதிலிருந்து கேன்ஸ் திரைப்பட விழாவில்தான் முதல் முறையாக திரையிடப்படுகிறது. ஜூலை மாதத்தில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2.கோதாவரி ( Godawari – Marathi  )


கோதாவரி ஆற்றுப்படுகையை ஒட்டி நிகழும் இத்திரைப்படத்தை நிகில் மஹாஜன் இயக்கியுள்ளார். 52-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



  1. ஆல்பா பீட்டா காமா ( Alpha beta gama - hindi )


52-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்த ஆல்பா பீட்டா காமா திரைப்படத்தை சங்கர் ஸ்ரீகுமார் இயக்கியுள்ளார்.



  1. பூம்பா ரைட் ( Boomba Ride – Assamese, Dergaon )


அஸ்ஸாமின் ஊழல் புரையோடிபோயுள்ள கிராமப்புற கல்விச் சூழலை விமர்சிக்கும் இத்திரைப்படத்தினை பிஸ்வஜித் போரா இயக்கியுள்ளார்.



  1. துயின் (Dhuin - maithili )


மைதிலி ( Maithili ) மொழியில் பீகாரின் தர்பாங்கா பகுதியில் மேடை நாடகக்கலைஞரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுள்ள இயக்கப்பட்டது துயின் படம். இத்திரைப்படத்தை கமக் கார் ( Gamak ghar  ) திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அச்சல் மிஸ்ரா இயக்கியுள்ளார்.



  1. நிறையே ததகளுள்ள மரம். ( Niraiye thathakalulla maram - Malayalam )


8 வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளார் அதன் இயக்குனர். இத்திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் இயக்கியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த இந்த திரைப் படங்களை சர்வதேச திரைப்பட சமூகத்தின் கூரிய பார்வையில் திரையிடுவதன் மூலம் இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அதுமட்டுமின்றி, புதிய பொருளாதார தொடர்புகளின் மூலமாக மேலும் வாய்ப்புகள் கிடைக்கப்பெறலாம். இது, படைப்பாளிகளுக்கான ஓர் சிறந்த அங்கீகாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.