சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான நிலையில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோக் நகர் இல்லத்தில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது இல்லத்தில் பத்து AK-47 துப்பாக்கிகள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். விசாரணையில் இந்த துப்பாக்கிகள் திரைப்படத்திற்காக கொண்டு வரப்பட்ட டம்மி துப்பாக்கிகள் என்று தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்த துப்பாக்கிகளை அதிகாரிகள் மீண்டும் லோகேஷ் கனகராஜிடம் ஒப்படைந்தனர். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மாவட்டங்கள் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்கள் மற்றும் பல்வேறு வனிக வளாகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். போதுமான ஆவணங்கள் இல்லாமல் பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் தினமும் கைபற்றப்பட்டு வருகின்றன. பறக்கும் படை சோதனையினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அப்படியான சோதனையின் போது திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இல்லத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்காக கொண்டுவரப்பட்ட 10 AK-47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த துப்பாக்கிகள் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்திற்காக கொண்டுவரப்பட்டவை. பட தயாரிப்பு நிறுவனம் சார்பாக துப்பாக்கிகளுக்கான ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் அவற்றை மீண்டும் ஒப்படைத்தனர். 

Continues below advertisement