TVK Vijay: அனுமதி கொடுத்தும் பிரச்சாரத்தை ரத்து செய்தார் விஜய் - காரணம் என்ன?
TVK Vijay Election Campaign: கடலூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை ஏன் ரத்து செய்தார் ? - தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தும் ரத்து செய்வதற்கான காரணங்கள் என்ன?

கடலூரில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பிறகும் தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தது தவெகவினருக்கு ஏமாற்றதத்தை கொடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை, இரவு என போட்டிபோட்டுக்கொண்டு அனல் பறக்க பேசி வருகின்றனர்.
விஜய்க்கு ஏகப்பட்ட நிபந்தனைகள்
தமிழக அரசியலில் புதிய முகமாகவும் மாற்றமாகவும் களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. சென்னை கொளத்தூர், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய், கொளத்தூரில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதன்பிறகு, திருச்சி கிழக்கில் பிரச்சாரம் செய்தார். பின்னர், சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், சைதாப்பேட்டையில் பிரச்சாரத்திற்கு குறைவான நேரமே கொடுத்ததால் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் புகார் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடியில் கூடிய கூட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, நேற்று அங்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவரின் நெல்லை, தூத்துக்குடியே ஸ்தம்பித்தது. நெல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், பின்னர் சாலை வளம் வந்தார். அப்போது, நெல்லை மக்கள் வழிநெடுகிலும் விஜய் வரவேற்றனர். இந்த கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறினர்.
நெல்லையே இப்படி என்றால், தூத்துக்குடியில் அதுக்குமேல் இருந்தது. அங்கு விஜய் பேசுவார் என்று அறிவிகப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் கூடிய கூட்டத்தால் அவர் பேசுவதை தவிர்த்துவிட்டார். கடல் அலைபோல கூட்டம் நிரம்பி வழிந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பின்னர், விமானம் மூலம் சென்னை திரும்பிய விஜய், கடலூரில் இன்று பிரச்சாரம் செய்வார் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் வழங்கியது.
கடலூரில் பிரச்சாரம் ரத்து ஏன்?
ஆனால், கடலூரில் இன்று விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனுமதி வழங்கியும் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று தவெகவினரே குழம்பியுள்ளனர். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், வடலூர், சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. புதுச்சேரியில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இது காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டி சென்று அங்கிருந்து கடலூருக்குச் செல்ல விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது.
தூத்துக்குடி, நெல்லையில் நேற்று ரோடு ஷோ சென்ற விஜய் இன்று தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். கடந்த வாரம் அனுமதியளித்தும் நேரக்கட்டுப்பாடு விதித்ததாக காரணம் கூறி சென்னையில் விஜயின் பிரச்சாரம் ரத்தானது. இந்த முறை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கிய பிறகும் கடலூர் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்துள்ளார். சாலை மார்க்கமாக கடலூருக்கு செல்வதில் சிக்கல் இருப்பதால் விஜயின் பிரச்சாரம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தேர்தல் நெருங்கும் நிலையில் கடலூரில் விஜயின் பிரச்சாரம் ரத்தானதால் தவெகவினர் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















