தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையிலும் என்டிஏ கூட்டணியிடம் ஆதரவு கோராமல், தவெக திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கொள்கை ரீதியாக ஆதரவு கோரி வந்த நிலையில், தற்போது என்டிஏ கூட்டணிக் கட்சியான அமமுகவிடம் சென்றது ஏன் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தவெகவுக்கு கடும் குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

116 ஆக உயர்ந்த தவெக ஆதரவு எம்எல்ஏக்கள்

தவெக ஆட்சி அமைக்க ஆளுநரை 3 முறை சந்தித்த நிலையிலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் விசிக தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளது. விசிக ஆதரவு அளித்தால் தவெக ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில், என்டிஏ கூட்டணியில் உள்ள அமமுகவிடம் தவெக ஆதரவு கேட்டுள்ளது. ’’பெரும்பான்மைக்கு பற்றாக்குறை இருந்தபோதிலும் தவெக, என்டிஏ கூட்டணிக் கட்சிகளிடம் செல்லவில்லை, பொறுமை காத்து கொள்கை ரீதியில் இணக்கமான கூட்டாளிகளின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறது’’ என்று விஜய்க்கு மைலேஜ் ஏறி இருந்தது.

Continues below advertisement

அரசியல் ரீதியாகவும் ஆட்சியமைப்பதிலும் சிக்கல்

எனினும் தற்போது என்டிஏ கூட்டணிக்குச் சென்று அமமுக எம்எல்ஏ காமராஜிடம் ஆதரவு கோரியது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குதிரை பேரம் நடந்துள்ளதாக ஆளுநரிடமே நேரடியாகச் சென்று டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளது, அரசியல் ரீதியாகவும் ஆட்சியமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

விசிக ஒருவேளை ஆதரவு அளித்தாலுமேகூட, அதிலும் குதிரை பேரம் நடந்திருக்குமோ என்று ஆளுநர் சந்தேகப்பட்டு விசாரணை செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்ளவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் தவெகவே வழிவகை செய்து கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக விரித்த வலையில் தவெக தானாகவே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாஜக விரித்த வலையில் தவெக விழுந்தது ஏன்?

அமமுகவின் ஆதரவு இல்லாமலேயே தவெகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சியை தவெக நாடியது ஏன்? பாஜக விரித்த வலையில் தவெக விழுந்தது ஏன்? தெரிந்தே தவெக கண்ணி வெடியில் கால் வைத்தது ஏன்? என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த முன்னெடுப்புகள், தமிழ்நாட்டை குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகர்த்துமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. 

எனினும் இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறும்போது, ’’அமமுக எம்எல்ஏ காமராஜ் தானாகவே வந்து ஆதரவுக்கரம் நீட்டியதால், அதை ஏற்றுக் கொண்டோம், அது இப்படி மாறும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.