விழுப்புரம்: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறும் அச்சகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஷேக் அப்துல் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்றுவது குறித்து அச்சக உரிமையாளர்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி விதிகள்

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை விளக்கினார். குறிப்பாக, தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் அச்சிடுவது குறித்து அவர் கூறியதாவது:

Continues below advertisement

பெயர் மற்றும் முகவரி கட்டாயம்: எந்தவொரு அச்சகமும், உரிமையாளர் மற்றும் வெளியிடுபவரின் பெயர் மற்றும் முழு முகவரி இல்லாத தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் (Pamphlets) அல்லது சுவரொட்டிகளை (Posters) அச்சிடக்கூடாது.

அங்கீகாரம் அவசியம்: தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை அச்சிடும்போது, அந்த அறிவிப்பில் வெளியிடுபவர் முறையாகக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். மேலும், அந்த நபர் குறித்து நன்கு அறிந்த இருவர் சான்றளிக்க வேண்டியது கட்டாயம்.

ஆவண சமர்ப்பிப்பு: அச்சிடப்பட்ட ஆவணத்தின் ஒரு நகலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அச்சக உரிமையாளர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம்

"தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிச் செயல்படும் அச்சகங்கள் கண்டறியப்பட்டால், உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அபராதம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மாவட்டத்திலுள்ள அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.