பண்ருட்டியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்,போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் உடன் தொடர்புடையவர் என்று பண்ருட்டியில் அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Continues below advertisement

கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை திமுக முடித்து விட்டதாகவும் பத்தாண்டுகளாக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு 8 சீட்டு, நேற்று வந்த தேமுதிகவிற்கு 10 சீட்டு வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார்.

Continues below advertisement

அப்போது அன்புமணி பேசியதாவது:

’’பண்ருட்டி பலாப்பழத்திற்கு உரிய விலை இல்லாத காரணத்தால் அவர்கள் நெடுஞ்சாலையில் நின்று  விற்க வேண்டிய நிலை இருக்கிறது. பண்ருட்டியில் விளையும் முந்திரிக்கு உரிய விலை இல்லை.. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

பண்ருட்டியில் திமுக கூட்டணி சார்பில் நிற்க வைக்கப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் யார்? சில மாதங்களுக்கு முன்பு திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை 3000 கோடிக்கு போதை பொருள் விற்ற காரணத்தால் கைது செய்தார்கள். அவருடன் தொடர்புடையவர்தான் இந்த பண்ருட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர். ஆனால் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மோகன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், எளிய மக்களுடன் பழகக் கூடியவர்.

பட்டியலின மக்களுக்கு கடைசி இடம்

தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் புரோட்டாகால் அடிப்படையில் கடைசி அமைச்சராக பட்டியல் இனத்தை சேர்ந்த கயல்விழி என்பவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

32 ஆவது இடத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான மதிவேந்தனுக்கு கொடுத்திருக்கிறார்கள். முப்பதாவது இடத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

பட்டியலின மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும், ஆனால் திமுக பட்டியலின மக்களுக்கு எதுவும் நன்மை செய்யாது. பிறகு எதற்காக திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்?

இபிஎஸ்ஐ பார்த்துக் கேள்வி கேட்க தகுதி உள்ளதா?

இப்படி எல்லாம் செய்துவிட்ட திமுக இபிஎஸ்ஐ பார்த்துக் கேள்வி கேட்க தகுதி உள்ளதா? 5 ஆண்டுகளில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதைச் சொல்லி திமுக ஓட்டு கேட்கட்டும்.

ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக தங்களுடைய சாதனைகளோ, வாக்குறுதிகளோ, கொள்கையோ சொல்லி ஓட்டு கேட்காமல் 8000 ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதை சொல்லி வாக்கு கேட்கலாமே?’’

இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பினார்.