உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவை வடக்கு பாஜக தலைவர் வானதி சீனிவாசன் தனது உடல்நிலைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தொகுதியை மாற்றிய வானதி சீனிவாசன்

2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் இம்முறை வடக்கு தொகுதிக்கு மாறியுள்ளார். 

சூறாவளி பரப்புரை - மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்ததும், வானதி சீனிவாசம் தொகுதி முழுக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். அவருக்கு அந்த பகுதி மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.இந்த நிலையில் தேர்தல் பரப்புரையின்போது அவருக்கு அதிகமாக கால் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது அங்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் காரணமாக அலர்ஜி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் 3 முதல் 4 நாட்கள் தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வானதிக்கு பதிலாக அவரது மகன் வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு வந்தார்.  

இந்நிலையில் வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், அன்பு சகோதர, சகோதரிகளே, உங்கள் அன்பினாலும், பிரார்த்தனையாலும் நான் விரைவாக உடல்நலம் தேறிக் கொண்டிருக்கிறேன். இரண்டு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனக்காக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று மாலை பிரதமர் மோடி அவர்கள் பாஜவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாட இருக்கிறார். நமோ செயலி மூலம் அவருடன் உரையாடும் நிகழ்வை வெற்றிக்கரமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் மீது அளப்பறிய அன்பும், ஆற்றல் மீது  அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கும் பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியின் மூலம் நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.