ஜிஎஸ்டி வரி வருவாயைப் பகிர்ந்து அளிப்பதில், மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம், தான் ஆளும் மாநிலங்களுக்கு தாராளமாகக் கொடுக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்குப் பேரிடர் நிதிகூட கொடுக்கவில்லை என்பது தமிழ்நாட்டின் வருத்தம். இதைச் சரிசெய்து, தமிழ்நாட்டின் மக்களின் அன்பைப் பெற வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகின்றது. இதற்காகப் பல முறை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அது மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வருத்தத்தை அதிகரிக்கவே செய்தது; குறைக்க செய்யவில்லை.


இந்நிலையில், தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உதயநிதி, மிஸ்டர் 29 பைசா என்று பிரதமரை அழைத்தார். இது ட்ரெண்டாகியுள்ளது. இப்படி பிரதமரை அழைக்கக்கூடாது என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதுவும் எடுபடவில்லை.


தமிழ்நாடு மத்திய அரசுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா திரும்பக் கிடைக்கிறது. உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.2.73ம்  பீஹாருக்கு ரூ.7.06ம் திரும்பக் கிடைக்கின்றன. 15வது நிதிக் குழு அறிக்கை இந்த விவரங்களைக் கூறுகிறது. தமிழர்கள் கட்டும் ₹1 வரியில் தமிழ்நாட்டுக்கு திரும்பக் கிடைப்பது 0.29 ரூபாய்தான் அதாவது 29 பைசாதான் திருப்பி கொடுக்கிறார்கள். அதுவே உத்தர பிரதேசத்துக்கு 1 ரூபாய் வரியை வாங்கிக்கொண்டு திருப்பித்தருவது ரூ.2.73.


தமிழ்நாடு கட்டும் வரியான 5.16 லட்சம் கோடிகளில், திருப்பித்தருவது 2.08 லட்சம் கோடிதான். மீதி தமிழ்நாட்டின் வரிவருவாய் 3.08 லட்சம் கோடிகள் வட இந்திய மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திடம் 2.24 லட்சம் கோடிகளை வரியாக வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுப்பது 9.04 லட்சம் கோடிகளாக உள்ளது. 


இதன் அடிப்படையில்தான், உதயநிதி மோடியை மிஸ்டர் 29 பைசா என்று அழைத்தார். இந்தச் சிக்கலையே மற்றொரு புறம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதில் சொல்லுங்க மோடி என்று கேள்வி கேட்டார். இந்தக் கேள்விகளுக்குத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பாஜகவினர் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மிஸ்டர் 29 பைசா என்பது தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரெண்ட் ஆவதால் மோடி கோபத்தில் உள்ளார். உதயநிதி குஷி ஆகியுள்ளார்.


{இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகளே. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது. }