TVK Vijay: "சுத்தியிருக்கவங்களால அவதூறு.." சங்கீதாவை மறைமுகமாக சுட்டிக்காட்டிய விஜய்!
தவெக தலைவர் விஜய் தன்னைச் சுற்றியிருப்பவர்களை வைத்த அவதூறு பரப்புவதாக தனது மனைவி சங்கீதாவை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப்போட்டி தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. இவர்களுடன் சசிகலா - ராமதாஸ் கூட்டணியும் களத்தில் இருக்கிறது.
இந்த தேர்தலில் அறிமுக கட்சியாக தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று திருநெல்வேலியில் பரப்புரையில் ஈடுபட்ட விஜய் தனது விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
அவதூறுகள்:
எவ்வளவு அவதூறுகள்.. கரூர் விவகாரம் பற்றி ஊருக்கேத் தெரியும். ஆனா, போடு. விஜய் மீது பழியைப் போடு. என்னடா இவ்வளவு பெரிய பழியைப் போட்டாலும் மக்கள் விஜய் கூடவே நிக்குறாங்க. இது என்னடா அதிசயமா இருக்குது? அப்படினு அது முயற்சி பண்ணிப்பாத்தாங்க. அது மக்கள் கிட்ட எடுபடல. அடுத்து வேற என்ன பண்ணலாம். முடக்கு.. ஜனநாயகனை முடக்கு.
படத்தை முடக்கின பையன் டிஸ்டர்ப் ஆகிடுவான். அதுனால படத்தை முடக்கினாங்க. யாரு முடக்குனாங்கனு உங்களுக்கேத் தெரியும். அது நான் சொல்லித் தெரியனும்னு அவசியம் இல்லை. என்னடா இவன், படத்தை முடக்குனாலும் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பாத்துட்டு போறான். அதுவும் எடுபடல.
மக்களிடம் எடுபடவில்லை:
போடு எஸ்.ஓ.பி.னு ஒன்னு போடு. விஜய்க்கு மட்டும் தனியா ரூல்ஸ். தனியா ரெகுலேஷன்ஸ், தனியா கண்டினுன்ஸ். அவனுக்கு மட்டும் போடு. மத்த கட்சிங்களை எல்லாம் விடு. விஜய்க்கு மட்டும் தனியா போடு. அவன் வெளியவே வரக்கூடாது. மக்களைச் சந்திக்கவே கூடாது. என்னாச்சு. அதுவும் எடுபடல.
சுற்றியிருப்பவர்கள் மூலம் அவதூறு:
சரி, அடுத்து வேற என்னப்பா பண்ணலாம்? நம்மளை சுத்தி இருக்கவங்களை வச்சு, அதாவது இத்தனை வருஷமா வெயிட் பண்ணி இப்போ தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்னாடி கரெக்டா அந்த டைம் பாத்து ஒரு அவதூறு பரப்ப வேண்டியதுதான். அது என்னனு உங்களுக்கேத் தெரியும். அதுவும் மக்கள்கிட்ட எடுபடல.
அது மாதிரி எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள் நீங்கள் கொடுத்தாலும் இந்த திமுக-னாலயோ, இந்த பாஜக-னாலயோ இல்ல இந்த மற்றும் பலராலயோ வேற யாராலயும் மக்கள்கிட்ட இருந்து என்னைப் பிரிக்க முடியாதுனு சொல்ல வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விவாகரத்து:
விஜய் மனைவி சங்கீதா கடந்த சில வருடங்களாகவே அவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சங்கீதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து மனு மீதான விசாரணை வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து கோருவதற்கு முக்கிய காரணமாக அவர் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதே காரணம் என்று சங்கீதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவாகரத்து வழக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.
ஏற்கனவே, இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசிய விஜய் வருத்தப்பட வேண்டாம் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது தன்னைச் சுற்றியிருப்பவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் என்று பேசியுள்ளார்.




















